Saturday, February 29, 2020

வீடென்பது...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு பெருங்கனவு சொந்தமாய் ஒரு வீடு. காலமும், சூழலும். வசதியும் வாய்ப்பிற்கும் ஏற்ப தங்களுக்கென ஒரு கூட்டை ஏற்படுத்திகொள்கின்றனர் வீடென பெயரிட்டு. நடுத்தர வர்க்கத்தினரோ தனது சம்பாத்தியத்தின் ஒரு பெரும் பகுதியை சொந்த வீட்டிற்காய் செலவு செய்கின்றனர் அல்லது சேமிக்கின்றனர். அதற்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரே பதில் வாழ்க்கையில் ஓடுவது  பின்னாளில் அமைதியாக ஓரிடத்தில் இருந்து ஓய்வெடுப்பதற்கு தான் என கூறுவதும் உண்டு.ஏறத்தாழ வாழ்க்கையின் இளமைகாலம் முழுமையையும் முதுமையின் ஓய்வுக்காக ஓடுவதிலேயே தொலைத்திருப்பதின் முரண் தான் புரியாதது.

தான் பிறந்ததிலிருந்து திருமணம் முடிக்கும் வரை பார்த்திடாத ஒரு நகரத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்த பார்வதி அக்காவிற்கு வீடுகள் ஒன்றன்மீது ஒன்று இருந்ததே பெரும் வியப்பாக இருந்தது. தன்னை சுற்றியும் தன் கிராமமே இருப்பது போல் ஒரு உணர்வை தந்ததாய் சொல்லிக்கொண்டாள் திருமணமான புதிதில் தனது சொந்தங்களிடம். நிதர்சனமோ வெகு விரைவில் முகத்தில் அறையத்தொடங்கியது. பூட்டப்பட்ட கதவின் பின் இருக்கும் நான்கு சுவர்கள் மட்டும் தனது வீடு என சுருங்கிக்கொள்ளும் நகரத்து வாழ்கை ஏனோ அலுப்பேற துவங்கியது பார்வதி அக்காவிற்கு.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் , நகரத்துக்கு மிக அருகாமையில் இடம் வாங்கி புதிதாய் ஒரு வீட்டை கட்டத்துவங்கினார்.விசாலமான இரு அறைகளும் , அடுப்பங்கரையும், பூஜை அறையும் உள்ளும் புறமும் இரண்டு கழிப்பறை உட்பட பார்த்து பார்த்து கட்டப்பட்டது. சொந்தங்கள் தங்கிக்கொள்ள  தனி அறையொன்றும், பூந்தோட்டமும்,காய்கறி செடிகளுமாய் அந்த வீட்டை நிரப்பி இருந்தனர். சுற்றிலுமாக நான்கு புறமும் ஆளுயர சுற்று சுவர் எழுப்பி, இடம் தான் மாறிதே தவிர்த்து பார்வதி அக்காவிற்கு நான்கு சுவர் மட்டுமே வீடு என்றானது.

சுவர்களும், ஜன்னல்களும், கதவும் மேற்கூரையும் நிலைப்படிகளும்  மட்டுமே வீடென்றாகிவிடாது. அவற்றிற்கு உயிர் கொடுக்கும் மனிதர்கள் இல்லாவிடில்.அவ்வாறு மனிதர்கள் தரும் உயிர்ப்பு ஆண்டாண்டிற்கும் அந்த வீட்டிற்கு ஒரு பெயரை உருவாக்கித்தரும். அது தேடித்தேடி தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பெயர்  சூட்டுவது போன்று தன மனக்கனவில் கருக்கொண்டு உருவாகி, ஈன்றெடுத்தார் போன்ற தனது கனவு வீட்டிற்கு பெயர் சூட்டி மகிழும் வழக்கமும் ஆங்காங்கே உண்டு அல்லது அதுவே ஒரு காரணப்பெயரை சுட்டிக் கொள்ளும் சூழலும் அமைவது உண்டு.

மின் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்த சதாசிவத்திற்கு பணி நிறைவிற்குள் தன் மனைவியின் எண்ணப்படி ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதே அவரது கனவு. வீடு எப்படி இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அது குறித்த எண்ணமும் வடிவமுமோ அவரிடம் கிடையாது. அவருக்கு நான்கு பிள்ளைகள் அவரவர் நன்கு படித்து வெளியூரிலும், வெளிநாட்டிலுமாக குடும்பத்தோடு  செட்டில் ஆகிவிட்டனர். சதாசிவமும் அவரது மனைவியும் மட்டுமே உள்ளூரில். பணி ஓய்விற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவியின் ஆசை படி வீடு ஒன்றை கட்டினார். மிக எளிமையான வீடு. இரண்டு அடுக்கைக் கொண்டது. அதில் நான்கு  மகனுகளுக்கும்  ஒவ்வொரு அறை என அவ்வீடு அமைந்திருந்தது. சதாசிவத்தின் மனைவி பெரும்பாலும் அடுப்படியே கதி என்றிருப்பதால் தனக்கு அது தன்னுடைய அறை என கொண்டிருந்திருப்பாரோ.. கிரகபிரவேஷத்திற்கு முதல் நாள் ஒரு கிரனைட் கல்லில் பெயர் ஒன்று பொறித்து வந்து அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார்..அதில் "வசந்தம் இல்லம்" என தனது மனைவியின் பெயரை பொறித்திருந்தார். காதல் மனைவியின் கனவு இல்லத்திற்கு. அவ்வீடு அவரது நேர்மையை மட்டுமே பேசியது.

ஒவ்வொரு வீடும் ஏதோவொரு நினைவை சுமந்து கொண்டும், பிரித்தறியா பெயரைத் தாங்கியும் நிற்கிறது. அந்த வீட்டில் வாழும் மனிதர்கள் அந்த வீட்டோடு ஒரு பினைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும்,ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் சில நினைவுகளை/ நிகழ்வுகளை வீட்டின் மீதும் , மனதோடும் பூட்டியும் கொள்கின்றனர்.ஒரு வீட்டின் அடையாளம் என்பது  அந்த வீட்டின் வடிவமோ, அழகோ, வெளிபுறத்தோற்றமோ நிர்ணயிப்பதில்ல. காலங்காலமாக அங்கு இருந்த / வாழ்ந்த மனிதர்களாலேயே அறியப்படுகிறது. அந்த தெருவிலேயே பெரியதாக அப்போது தான் கட்டப்பட்ட வீட்டிற்கு "பங்களா வீடு" எனவும், நிறைய , அடர்ந்த மரங்களையும் , செடிகளையும் கொண்ட வீட்டை " தோப்பு வீடு" எனவும், முதல் தலைமுறை கட்டிய வீட்டை, இளைய தலைமுறையினர் " பெரிய வீடு" எனவும் அழைப்பதுண்டு.

எல்லாவற்றையும் விட அந்த வீட்டில் வசிப்பவர்களின் குணங்களை எடுத்து சொல்லும் படியும், அவர்கள் செய்யும் தொழில் / பணி சார்ந்தும் பெயரொன்றையும் சூட்டிக்கொள்ளும் அந்த வீடு.


தேவியும் அவரது கணவரும் ரிடயர்மென்ட்டுக்கு பிறகு, அத்தெருவில் வீடு வாங்கி குடியேறினர்.பணி ஓய்வு வாழ்க்கையை பரிபூரணமாய் மகிழ்ந்து வாழ்ந்தனர். மாலையானதும் நடைபயிற்சியும், வீட்டின் திண்ணையில் அரட்டை கச்சேரியுமாய் அமர்களப்படும்.  இரவு வரை சிரிப்பும் பேச்சு சத்தமுமாக இருக்கும். தெருவிலிருப்பவர்கள் அந்த வீட்டை "க்ளப் ஹவுஸ் " பெயரிட்டனர். திடீரென தேவியின்  கணவர் காலமானதும், தேவிக்கு தான்  நிற்கதி ஆகிவிட்டோம் என அந்த வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தன் கணவர் இருப்பது போன்று பேசிக்கொண்டே இருப்பார் சுவரப்பார்த்தபடியே.
அரட்டை அடிக்க அக்கம்பக்கத்தினர் வருவதும் குறைந்து போய் நின்று விட்டது.மாலையானதும் யாரும் அத்திண்ணையில் அமராதவாரு தண்ணீரை ஊற்றி விடுவார். அப்டியே யாராவது நின்றாலோ அமர முற்பட்டாலோ பெரும் குரலில் கத்தி யாரையும் அவ்வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் கூச்சலிட்டப்படியே இருப்பார். சில நாட்களில் அங்குள்ளவர்களுக்கு பழகிவிட்டது. இப்போது யார் கேட்டாலும் அது " கெழவி வீடு" என்கின்றனர்.

 ஒவ்வொரு வீடும் சில ஞாபங்களையும், வைராக்கியங்களையும். சில வெற்றிகளையும் தன் சுவற்றுக்கு பலம் சேர்த்து கொள்கின்றன. வெறும் கல், மணல், செங்கற்களால் உருவானவை அல்ல கனவு ,ஆசை, லட்சியம், அடையாளம் என அனைத்தின் கலவையாகவும் உயர்ந்து நிற்கும் வீடு.

வீடு கட்டுவதை தீர்மானித்தவுடன் அதற்கு ஆகும் செலவு, வரைபடம், டைல்ஸ், இதர தேவையான பொருட்கள் பற்றி ஆயிரமாயிரம் கலந்துரையாடல் நடக்கும் குடும்பத்தாரோடு. ஆளுக்கொரு கருத்து தெரிவிப்பர். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமாய் எழும்பி நிற்கும் எண்ணங்களின் தூண்களாய்..  ஆசைகளின் வடிவமாய்,என்றோ எங்கோ பார்த்த வீடொன்றின்  முகப்பு கதவை நினைவூட்டியும், பால்யத்தில் ஏறித்தாவி ஓடி விளையாண்ட திண்ணையும், எத்தணை முறை விழுந்து எழுந்தாலும் சிறு கீறலும் ஏற்படுத்தாத ஆத்தங்குடி கை கல்லும், முட்டையும், தேங்காய் எண்ணெய்யையும் குழைத்து கலவையாய் பூசி சுவற்றை பளபளவென மின்னச்செய்ததாய் சொல்லும் ஆச்சியின்  வார்த்தைகள் காதுகளில் ஒலிக்கச்செய்யும், உத்திரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியதும் நினைவுகளில் வராமல் தடுக்க இயலாதது.


 திட்டமிட்டபடி கனகச்சிதமாய் வெகுசிலராலே கட்டி முடிக்க முடியும். சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களின் கனவு இல்லத்திற்கு அழகூட்டி கொள்வோரும் உண்டு.  இப்போதெல்லாம் நிறைய பில்டர்ஸ் சகாயவிலையில் வீட்டைகட்டி தருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ அல்லது தனித்தனி வீடுகளாகவோ,  உடனடியாக குடிபுகும் வகையில் வீடுகளை கட்டியும் விற்பனை செய்கின்றனர்.

வீடென்பது உயிரற்றவை  அல்ல, வீட்டிற்கு  சில உணர்வுகளையும் , நினைவுகளையும் கொடுத்து நம் உயிரோடும் உணர்வோடும் கலந்தே இருக்கிறது. பால்யத்தின் ஞாபங்களை மீட்டெடுக்கும் பூர்வீக வீட்டை   நினையாதோர் தான் யார்?? காலத்தின்  சுழற்சியில் கை மாறி , மீறி போகும் பரம்பரை வீட்டை எப்படியாவது மீண்டும் கைக்கொள்ள மனம் தான் ஏக்கம் கொள்ளாமல் இருந்ததுண்டா..??  தலைமுறையின் முதல் வீடு என்பது பெரும் கனவொன்றை சிறகில் சுமப்பது போன்றதாகும். வலிமைமிக்க கனவொன்றின்.அஸ்திவாரத்தை அவ்வளவு எளிதில் அசைத்துபார்த்திட முடியாதது..

ஒவ்வொருவரின் மனதில் அடிக்கல் நாட்டியிருக்கும் கனவு இல்லத்திற்கான  அஸ்திவாரத்தை போட துவங்கினால், கனவு கைகூடும் நாள் வெகுதொலைவில் இல்லை. நம் உணர்வோடு கலந்திருக்கும் கனவு பொதியொன்றிக்கு அழகியதொரு பெயர் சூட்டியும் மகிழ்ந்திருப்போம்.
வீடென்பது வீடு மட்டுமேயல்ல..!!