Sunday, October 24, 2021

வாசனை


 எப்போதும் 

எங்கேயும்

ஒரு வாசனை...

யாரோவொருவரை

ஞாபகத்தின்

துணுக்குகளில்

உதிர்த்துச்செல்கிறது.


ஈரச்சாக்கில்

மூட்டைகட்டி

கருவேப்பிலையை

ஏற்றிசெல்லும்

வாகனத்தினை

கடந்து செல்லும்

போதெல்லாம்,

வாசல் திண்ணையில்

அழுக்கு கூடையில்

அடுக்கிவைக்கப்பட்ட 

கீரையின் ஓரத்திலிருந்து

கொசுறாய் கொஞ்சம்

கருவேப்பிலை உருவி தரும்

அவளுக்கு,

அத்தணை பொருத்தமாய்

இருந்தது

கருவேப்பிலையின்

வாசனை...


முறுக்கிக்கொண்டே

திரியும் அவனுக்கென்று

பிரித்யோக வாசனையொன்று

இருந்தது..

வாலாட்டிக்கொண்டே வரும்

நாய்க்குட்டியின்

ப்ரியத்தினை

ஒத்திருக்கும்...


கரைந்த ஹாமாம் 

சோப்பின் வாசனையிலும்

பாண்ட்ஸ் பவுடரின் 

வாசனையிலும்,

ஏதோவொரு

முகம்

தோன்றி காற்றில்

மறைந்து

நினைவுகளை நீட்டிச்செல்லும்..


அத்தனை நினைவுகளையும்

உறையச்செய்யும்

ஒரு வாசனை..

ஆறுலாய் தலை கோதி

முன்நெத்தி முத்தமிட்டு

செல்லும் அந்த வாசனை

அப்பாவின்

வாசனையை

ஒத்திருந்தது

அப்பா இறந்த பின்னும்..!!


-ப்ரவீணா

Friday, October 22, 2021

உழைப்பு


ஒருவர் எத்தனை வயது வரையிலும், உழைக்கலாம்??

அது அவரவர் தகுதி சார்ந்தது..பொதுவாக நடுத்தர வர்க்கம்,அப்பர் மிடில்கிளாஸ் மக்கள் எல்லாம் தன் மகன் வேலைக்கு செல்லும்வரையிலும்  என்பதாக இருக்கும்.. சரி...ஏழ்மையில் இருப்போருக்கு.., வறுமையின் காரணமாக தன் தள்ளாத வயதிலும் உழைத்தே வாழ்கிறார் இப்பெரியவர்... இன்று நான் கண்ட/ வியந்த மாமனிதர் என சொல்லலாம்..


35 - 40 வயதில் உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்துவிட்டு வந்து தான் என்னவோ வெட்டி முறித்து களை பறித்து வந்தது போல் "சீன்" போடுபவர்கள் மத்தியில், நிஜமாகவே வெட்டி,முறித்து,களை பிடுங்கி நேர்த்தியாக பாத்தி கட்டி தண்ணீர் தெளித்து செல்கிறார்.

மாதமொரு முறை வந்து அம்மாவீட்டின் முன்புறம் இருக்கும் தோட்டம் சுத்தம் செய்து செல்வார். கொடுக்கும் காசுக்கு அதிகமாகவே உழைப்பை போடுவார். மழை பெய்து கொண்டே இருப்பதால், இன்று வேலையில்லை என கூறி பத்து ரூபாய் கொடுத்து இன்னொரு நாள் வாங்க தாத்தா வேலை இல்ல இன்னிக்கு எனக்கூறியதும், ஏதோ அரை மனதாக சென்றவர் தயங்கி.. "சாப்பிட ஏதும் இருக்கா மா" என கேட்க,காலை உணவும் இல்ல மதிய சமையலும் ஆகாத நிலையில் எதும் இல்லை எனக்கூறிட, பின்பு மனம்கேக்காமல் அம்மா தோசை ஊத்தி  தரட்டா தாத்தா என கேட்க சரி நான் அந்த பக்கமா உட்கார்ந்திருக்கறேன் என சொல்லிவிட்டு எதிர்த்த இடத்தில் அமர்ந்து கொள்ள சென்று விட்டார். தோசை ஊத்தி எடுத்தகொண்டு போய் பார்த்தால் அங்கிருந்த களைஎல்லாம் பிடுங்கி போட்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்


இந்த வயதிலும் உழைத்து  தான் உண்ண வேண்டும் என எண்ணும் அவரது எண்ணமும் நேர்மையும் என்னை மிகுந்த வியப்பிலாழ்த்தியது..

" தாத்தா, தோசை ஊத்திட்டு வந்துட்டேன்.வாங்க சாப்பிடுங்க அது ஆறிடும்"

"இரு தாயி.. இந்த ரெண்டு பில்ல புடுங்கி போட்டு வர்றேன்.. அரகுறையா வேலய விட்டு வந்தா சோறு இறங்காது..இத வந்தடறேன் நீ போ.. வெய்ய அடிக்குது பாரு...

-சிறிது நேரம் கழித்து...

"தாத்தா பசிக்குதுன்னு கேட்டீங்கன்னு தானே தோசை ஊத்திட்டு வந்தேன்., அது ஆறிட்டு கிடக்கு வந்து சாப்பிட்டு வந்து வேலை பாக்கலாம் ல...

"இதாருடா இவ..கண்ணு வேலை பாக்கசொல்ல பசி வராது..நீ சோறு போடறன்னு நான் வேலை பாக்க கூடாது..வேலைய நேர்மையா செஞ்சாதான் திங்கற சோறு கூட உடம்புல ஒட்டும்.. சொங்கோடம் பாளம் முழுக்க வேல செய்யறே... செங்கோடன்ட்ட விட்ட வேல சரியா இருக்கும்ன்னுட்டு சொல்லுவாங்க..அந்த சின்ன சொங்கோடம்பாளத்துள மேக்க இருக்கற கவுண்டரு ஊட்ல இன்னுமும் மட்டை வாங்க(தேங்கா மட்டை உரிக்க) போயாறேன்..

வேலையில்லீன்னு சொன்னீயே எம்முட்டு பில்லு கிடக்கு..அதெல்லாத்தியும் ஓரமா எடுத்து போட்டு வாரேன்.. நீ போத்தா உள்ள வேலை பாக்கையில வந்து சோறு திங்க கூப்பிட்டுகிட்டு...  என கூறிவிட்டு தன் வேலையை தொடர்கிறார்..


காலைல 4 மணிக்கு எழுந்து,வாசல் பெருக்கி, பாலை காய்ச்சி,காபி போட்டு சமைத்து,பையனை ரெடி பண்ணி சாப்பிட வெச்சு ஸ்கூல்க்கு அனுப்பி வீட்டுகாரருக்கு சாப்பாடு போட்டு தண்ணி எடுத்து கொடுத்து ஆபீஸ் அனுப்பிட்டு காய்கறி வாங்கிட்டு என் வேலைக்கு உன்டான பிரின்டிங் யூனிட் டிஸ்கஷன் முடிச்சு அம்மாவுக்கு வேனுங்கற மளிகை சாமான் வாங்கி கொடுத்துட்டு, காலைல இருந்து ஒரே வேலைன்னு அலுத்து கொள்ளும் என்னை பார்த்து நானே வெட்கிக்கொள்கிறேன்..!! அந்த பெரியவர் முன்பு நான் செய்வதெல்லாம் ஒரு வேலையே இல்லையென்று..!!

Wednesday, August 11, 2021

ஒத்திகை

 பார்வையில் விலகி,

சொற்களில் பிரிந்து,

வெகுதூரம் சென்றபின்னும்

நினைவுகளில் ஏன்

நெருங்குகிறாய்..?


ஞாபங்களின்

அடுக்குகளில்

ஒவ்வொன்றாய் 

களைந்த பின்னும்

மிச்சமிருப்பது,


முதல் முத்தமோ

முதல் ஸ்பரிசமோ

முதல் சொல்லோ

அல்ல


கடைசி நொடி

தீண்டலும்,

கடைசியாய்

உதிர்த்த

சொல்லொன்றும்,

எல்லாம்

முடிந்து

பிரிகையில்..

விட்டு சென்ற

பார்வையிலும்

திக்கி நிற்கிறேன்


மீண்டும் 

ஒருமுறை

இறப்பதற்கு..!!


-ப்ரவீணா


Wednesday, July 21, 2021

நல்லதை பேசுங்க.. !

 காலைல வானொலியில்,பாடல்களுக்கு நடுவே சில பொதுவான  கேள்விகள் கேட்பாங்க அதற்கு நேயர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துப்பாங்க. எப்பவும் கேட்பதுண்டு எப்போதாவது என் கருத்தை பகிர்ந்து கொள்வதும் உண்டு. சில சமயங்களில் மொக்கையான  கேள்விகளாக கூட இருக்கும் பங்கேர்க்கும் நேயர்களின் பதில்களால் சுவாரசியமாக மாறுவதும் உண்டு. 


இன்றைய கேள்வியாக, வீடு, நட்பு, உறவு,அலுவல்களில் புறணி பேசப்படுகிறதா ?? அது தவறு என்பதை உணர்கிறார்களா புறம் பேசுபவர்கள்... எனக் கேட்கப்பட்டது. காலைல வேலையாக இருந்ததால நான்  கருத்து பகிர்ந்துக்கல.. ;) 


 நிறையா பேர் நிறையா பகிர்ந்துகிட்டாங்க.. ஆனா எல்லோருமே சத்தியவான்களா மற்றவர் புறங்கூறியதாகவும், தாங்கள் ஒரு போதும் அவ்வாறான செயல்களை செய்வதில்லை என்பது போலவுமே இருந்தது அவர்களது கருத்து. 


மிக சிலரே கேள்வியின் ஆழத்தை புரிந்து கொண்டு பதிலளித்ததாக தோன்றியது. யாரு என்ன பேசினா எனக்கென்ன என்பது போல் இருந்திட யாருக்கும் வாய்ப்பதில்லை. சிலர் பேசியது வியப்பை தந்தது. சாதாரண கேள்வியையும் அரசியலோடு ஒப்புமைபடுத்தி, புறங்கூறலினால் அரசு எவ்வாரெல்லாம் வீழ்ந்து போகும் எனவும்.. நல்ல தலைமைக்கழகு நல்சொற்களைக் கேட்டல் என்பதையும் கருத்துக்களாக பகிர்ந்து கொண்டனர். 


அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போது, எனக்கு தோன்றிய சில கருத்துகள் : 


* புறங்கூறுபவர்களை விட அதை கேட்டு அதன் படி நடப்பவர்களே மிகுந்த ஆபத்தானவர்கள் நம்பிக்கையற்றவர்கள்.


*புறம்  பேசுபவர்களை ஒரு போதும் திருத்த முடியாது.


* புறம் பேசுதலால் எவ்வித நன்மையும் அடைந்திட முடியாது ( அப்போதைக்கு அவர்களுக்கு நல்லது நடக்கற மாதிரி இருக்கும் ஆனா இருக்காது )


புறம் பேசுபவர்களுக்கு கற்பனை வளம் மிகுந்திருக்கும் ;) 


புறம்பேசுவர்கள் ஒரு விஷயத்தை தவறாக சித்தரித்து, அடுத்தவரிடம் போய் சொல்லும் போது கேட்பவர் அவர் இயல்புக்கேற்றவாறு தவறாக புரிந்து கொண்டு எதிர் விணை ஆற்றும் பொழுது பல சிக்கல்கள் உருவாகின்றன. 


வீட்டிலோ, நட்பிலோ, உறவிலோ, அலுவலங்களிலோ நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில் அச்சிக்கலால் சிதைவு ஏதும்  ஏற்படாமல் காக்கப்படுகிறது.  புரிதல் இல்லாத இடத்தில் உறவு நீட்டிப்பதில்லை.


//பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.//  


அததான் வள்ளுவரும் சொல்லிருக்காரு... ;) 


நல்ல சொற்களை பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவங்க குறைய சொல்லி  உறவை பிரிப்பாங்கன்னு... :/ 


நல்லது பேச ஆயிரம் இருக்கும் போது அதையும் இதையும் ஏன் போட்டுகுடுத்து பேசுவானேன்.. அதால


 நல்லதை பேசுங்க நல்லதை மட்டுமே பேசுங்க... :)

Saturday, February 6, 2021

நிறமற்றவள்...

 கருப்பும்,வெள்ளையும் கலந்த

ஆட்டுக்குட்டியின்

கழுத்தைக் கட்டிக்கொள்ளும்

அம்முகுட்டிக்கு

அதன் நிறம் குறித்த

குழப்பங்கள் ஏதும் இல்லை


வீடும்,மரங்களும்

வானமும் வரைந்த

அம்முகுட்டி

மேகத்திற்கு பிங்க் நிறம் தீட்டி

வெட்கப்படுகிறாள்.


பச்சையில் ஒன்றும்

ப்ளூவில் ஒன்றுமாய்

இரு வேறு காலணிகள்

அணிந்து கொண்ட

அம்முகுட்டி

ஆடைக்கு மேட்ச் என

சிரிக்கிறாள்.


கட்டித்தழுவிட முனைகையில்

காற்றை கைகளால் துழாவிய

அம்முகுட்டி

நிறமற்று

கரைந்து போகிறாள்.


-ப்ரவீணா

Monday, January 25, 2021

கோலங்களும் வாழ்வியலும்

 நம்முடைய கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் ஓர் அர்த்தம் உண்டு. நம் பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்து அவை மூட நம்பிக்கைகள் என சொல்லிவிடுகின்றோம். அது போலவே மார்கழியில் கோலம் போடுதலில் உள்ள முக்கியத்துவத்திற்கு பின் மறைந்துள்ள அறிவியல் என்பது மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாகவும் இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறதாகவும், இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றதாகவும் அறிவியல் கூறுகிறது.

மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது

இந்த பிரபஞ்சத்தில் படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவத்தை அடிப்படையாக கொண்டவை அனைத்திற்கும் அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம் ஆகும். இந்தப் பிரபஞ்சமானது சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து இருக்கிறது. நம் உடல் கூட பல விதமான உறுப்புகளின் ஒன்றிணைப்பால் பிரமாண்டமாக படைக்கப்பட்டவை தான். இந்த உடலை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும்,பூமியின் சக்தி கால/ சூழ்நிலை ஏற்ப எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர முடியும். 

 கோலம் என்ற சொல்லுக்கு முதலில் தங்கம் என்ற பொருள் மட்டுமே அர்த்தமாக இருந்திருக்கிறது. பின்னர் மகிழ்ச்சி, அழகு ஆகிய பொருள்களிலும் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களிடையே கோலம் என்பது கலையுடன் தொடர்புடையது. மற்ற மாநிலத்தவர்களிடத்து முக்கிய வேறுபாடாக கோலங்களில் நிறம் இருப்பதால் அதை நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம் என்பர். இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பார்கள். இது ரங், ஆவலி என்னும் இரு சமஸ்கிருத சொற்களின் இணைப்பால் உருவானது. ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருகிறது.

தமிழ்நாட்டுக் கோலத்தையும் ரங்கோலி என்னும் வழக்கமும் உண்டு. இது சரியானது அல்ல. தமிழ்நாட்டில் வெள்ளை(அரிசி மாவு) & செம்மண் இட்டு கோலமிடுவதே மரபாக இருந்தது. இப்போது பல்வேறு பகுதியினரும் தமிழ்நாட்டில் வசிப்பதால் பூக்கோலம், வண்ணக்கோலம் எல்லாமும் போடப்படுகிறது. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். மதானே, சவுக்பூர்ணா, அல்பனா, அரிப்பனா ,சவுக் பூஜன், எய்பபன் என்றும் இதற்குப் பெயர்கள் உண்டு.

இக்காலத்தில் வண்ணக்கோலங்கள் அழகுக்காகவும், மரபுகளைப் பேணுவதற்காகவுமே வரையப்பட்டு வந்தாலும், அந்த காலத்தில் இதன் பின்னணியில் பல்வேறு நம்பிக்கைகளும், சமய, பண்பாட்டு முக்கியத்துவங்களும் இருந்தன. பொதுவாக வாசலில் வரையப்படும் கோலங்கள் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடத்தை கொண்டுவரும் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. பண்டிகைகள், சமய நிகழ்வுகள், திருமணம் போன்ற விழாக்கள்,பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் வண்ணக்கோலங்கள்,பூக்கோலங்கள் வரையப்படுகின்றன.தமிழ்நாட்டில் பொதுவாக மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் போடும் மரபு இன்றும் இருக்கிறது. விடியற்காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது நம் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதுவும் ஒருவகை யோகாசனம் இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இப்படி செய்யும் போது உடல் தானாவே புத்துணர்வை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. M னதை ஒருமுகப்படுத்துதல் மற்றும் உடலுக்கான பயற்சியும் ஒருங்கே அமைக்கப்படும் கோலமிடுதலால்.

கோலம் என்பதற்கு "நிலை" எனும் அர்த்தம் உண்டு. உதாரணமா தவக்கோலம், போர்க்கோலம் என அந்த நிலையை கோலத்தோடு தொடர்புபடுத்துவர்.

பொதுவாக தமிழ்நாட்டில் கோலம் போட தரையை சாணம் தெளித்து சமன் படுத்தி அதன் மேல கோலம் போடுவோம். அது ஒரு மாதிரி பச்சை நிறம் கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுவே கர்நாடகாவில் உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில், அவர்களது பாரம்பரிய முறைபடி காவி பூசி தரையை சமன் செய்து அதன் மேல அழகாக கோலமிடுகின்றனர். கேரளாவிலோ அவர்களது பாரம்பரிய முறைப்படி பூக்கள்,இலைகளை கொண்டு கோலமிடுகின்றனர். அதற்கு அத்தப்பூ கோலம் என்று பெயர். 

கோலத்தின் வடிவம் என்பது பொதுவாகவே ஸ்வஸ்திக் வடிவத்தை ஆதாரமாக கொண்டதாய் இருக்கும். கோலத்தின் இழைகள் எட்டு திசைகளை இணைக்கும் கோடுகளாய் அமையப்பட்டிருக்கும். ஒவ்வொரு திசைகளுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியும், பண்புகளும் இருக்கும். அதன் அடிப்படையிலேயே கோடுகள் இழுக்கப்படும். 

கோலங்கள் பொதுவாக வலது பக்கமிருந்து ஆரம்பித்து, கடிகார சுழற்சி (clockwise) முறைப்படி இழைகள் இழுக்கப்பட்டு, அனைத்தும் கோலங்களும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவடையும்படி அமைந்திருக்கும்

கோலமாவு என்று தனியாக பச்சரிசியை ஊற வைத்து நிழலில் உலர்த்தி அரைத்து உபயோகிப்பது தான் traditional method. இப்போல்லாம் சுண்ணாம்போ ஏதோ ஒரு கல்லைப் பொடித்துதான் செய்யப்படுகிறது. ஆனால் அரிசி மாவில் போடும் கோலம் இழை சரியாக வராமல் போனாலும் பார்க்க வெளுப்பாக இருக்கும். மண் தரை கொண்ட வாசல் என்றால் கண்டிப்பா மாலைக்குள் எறும்பு, பறவைகள் அந்த பொடிசாக இருக்கும் அரிசியை கொத்தி தின்னவரும், (கோலம் போடுவதே அதுக்குத்தானே?) 

கோலப்பொடியில் போட்ட கோலம் என்றால் ஈ எறும்பு சீந்தாது. கோலப்பொடியில் சிறிதளவு அரிசிமாவும் சேர்த்து போட வெளுப்பாகவும் வரும் அதே நேரத்தில் சிறு உயிரினங்களுக்கும் உணவிட்ட நிறைவும் கிடைக்கும்.

அதிகாலையில் கோலம் போடச்சொல்வதன் காரணம் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் நம்மை மாதிரியான 9-5 ங்கற வொர்க்கிங் ஹவர்ஸ் கிடையாது. மார்கழியில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் சிறு பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் இரை தேடி வெகுதூரம் செல்ல முடியாத காரணத்தினாலும் மார்கழியில் அரிசி மா கோலம் இடுதல் பெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை அனைத்தும் இரை தேட அதிகாலையிலேயே சென்று விடும் என்பதால் தான் நம்முன்னோர்கள் இப்படியான பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்..

கோலங்களை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.கம்பி அல்லது கோட்டுக் கோலம், புள்ளிக்கோலம் ஆகும்.கோட்டுக் கோலம் என்பது கோடுகளை இழுப்பதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் வரைவதாகும். கோடுகளே பிறதானமாக விரிவாக்கிக்கொண்டே போகலாம். 

புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், புள்ளிகளை வைத்து கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகள் வைப்பதிலும் இருவித முறைகள் உள்ளன.ஒரு வகையில் நேர்வரிசையில் ஒரு சதுர வலை பின்னல் போன்று சதுர வரிசையில் வைப்பதாகும். இரண்டாவது முறையில், நிலைக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் ஒன்றுவிட்டு ஒன்று எனும் வரிசையில் புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் வரிசையில் உள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் இரு பக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும்.

இந்த இரண்டு வகைகளையும் நேர்ப் புள்ளி கோலம், ஊடு புள்ளி கோலம் என்போம்.இப்புள்ளிக் கோலங்களையும் இரண்டு வகையாக பிரிக்கலாம். புள்ளிகளை தொடாமல் வரையப்படும் நேர் அல்லது வளைவான கோடுகளை கொண்டு வரையப்படுவது ஒரு வகை.புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை வரைவது இன்னொரு முறை.

அநேகமாக எல்லாக் கோலங்களும் ஜியாமென்ட்ரி வடிவ அமைப்புகளைப் பின்பற்றியே வரையப்படுவதால் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம்.பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம். இப்போது இதில் ஆண்களும் ஆர்வம் காட்டிகின்றனர்.

கம்பிக்கோலம், சிக்கு கோலம் எனப்படும் இவ்வகை கோலங்கள் இப்போது அருகி வருகின்றன. ரங்கோலி வகை கோலங்களே இப்போதைய நவீன காலத்தில் வாசலில் வரையப்படுகிறது. அதற்கு எந்த வரைமுறையும் இல்லை தேவைக்கு/ எண்ணத்திற்கு ஏற்றார்ப்போல் போட்டுகொண்டே போகலாம் என்பது இதில் இருக்கும் வசதி. ஆனால் அந்த காலத்தில் போட்ட கம்பிக்கோலத்தில், எந்த புள்ளியில் இழை நுழைய வேண்டும் எதில் வெளியேற வேண்டும் என ஒரு கணிதம் இருந்தது. 

சிக்கு கோலம் என்பது ஒரு வடிவமைப்பை உருவாக்கும் புள்ளிகளைச் சுற்றி கோடுகள் வளைந்தாற் போன்று வரையப்படுவதால் சிக்கு கோலம், கம்பி / நெளிக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் படிக்கோலமிடுவது கூடுதல் மங்களகரமாக இருக்கும். படிக்கோலம் என்றால் கோட்டு கோலம் (இது ஒவ்வொருவர் வீட்டில் ஒரு டிசைன் இருக்கும்) போட்டு சுற்றிலும் காவியில் ( செம்மண்) பார்டர் போடுவது. இதையும் துணியில் போடுவதே நல்லது கை கறை ஆனாலும். ஆனா இப்போது அதுவும் பொடியாகவே கிடைக்கிறது. வெள்ளை & சிவப்பு பெயிண்ட் பிரஷ் கொண்டு போடுவது எல்லாம் இப்போதுதான். 

ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை கோலங்கள் யந்திரம் போன்றவை.யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடப்பட வேண்டும். இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றை இழை கோலம் ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு செம்மண் இட்டு (காவி) அழகூட்டுவது சிறப்பானது.

வண்ணக்கோலங்கள் மனதை பிரதிபலிக்கும் ஆற்றல் உடையது. வண்ணங்களின் சேர்க்கையும்,தேர்வுமே எண்ணங்களை சொல்லிவிடும். கூடுதல் புத்துணர்வு ஊட்டுபவையாக வண்ணக்கோலங்கள் இருக்கும். 

கோலங்களை ஏன் உளவியல் சார்ந்து பார்க்க வேண்டும்??. கோலம் போடுகையில் மனம், மூளை செயல்பாடு, உடல் திறன் என்று ஒன்றுக்கொண்டு இணைந்தே செயல்படத் துவங்கும். முதல் நாளின் அயர்ச்சியோ, மன அழுத்தத்தின் வெளிபாட்டையோ, உடல் ஒத்துழைக்காததையோ கோலம் காட்டிக்கொடுத்து விடும்.

புள்ளி வைப்பதிலோ, கோடுகளை இழுப்பதிலோ/ இணைப்பதிலோ சிறு இடத்தில் பிழை ஏற்பட்டாலும் கோலம் முற்றிலும் தவறாகக்கூடும். அது போல தான் மனமும், எண்ணும் எண்ணங்களில் சிறு தவறு நேர்ந்தாலும் வாழ்க்கையும் அலங்கோலம் ஆகிவிடும் என கோலத்தோடே தொடர்பு படுத்துகின்றனர்.

வாசலில் போடப்படும் கோலங்களில் எப்படி மறுநாளும் அதன் தடயங்கள் இருக்கின்றதோ அதே போல் தான் மனதிலும் எண்ணங்கள் தடயத்தை ஏற்படுத்துகின்றன. அழித்து அழித்து போடுவது அவ்வளவு எளிதல்ல. 

உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாம் செய்யும் செயலில் முழுமையும், திருப்தியும் ஏற்படும். அதுபோல் அழகான கோலம் உருவாகவும் உடலும், மனதும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். 

ஒரு செயலை செயல்படுத்த தொடங்கியதும் தான் அதற்கான தேவைகள் என்ன ?? தடைகள் எது ?? என்று புரிபட ஆரம்பிக்கும். அதனை கடந்து வருவதே வலிமை.இயற்கை, உடல், பொருளாதாரம், சூழல் இவையெல்லாவற்றையும் விட மனது அதுவே எல்லாவற்றுக்குமான உறுதுணை. ஒன்றை பழக்கப்படுத்த மனதின் துணையிருந்தாலே போதும் எளிதில் கைவரப்பெறலாம் எதனையும்.

அதிகாலை வேளையில் எழுந்து கோலம் போட்டுவிட்டு அதன் பிறகே அன்றைய பணிகளை தொடங்கும் வழக்கம் இன்றும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில்தான் உடல் புத்துணர்வோடும், மனம் புத்திக்கூர்மையுடனும் செயல்படும்.

புள்ளிக்கோலங்கள் நமது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது. புள்ளிகள் வைப்பது என்பது நாம் ஒரு செயலை செய்ய திட்டமிடுவது. அதில் கோடுகள் போட்டு இணைப்பது, அந்த திட்டங்களை செயல்படுத்துவது. 

புள்ளிவைக்கும் இடத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கோலம் கோணலாகிவிடும். நினைவாற்றல் திறனை மேம்படுத்துவதோடு கவனச்சிதறலை கட்டுப்படுத்தும் ஆற்றல் புள்ளி கோலத்திற்கு இருக்கிறது. 

தினமும் காலையில் எழுந்ததும் கோலம் போடும் வழக்கத்தை பெண்கள்

 (ஆண்கள் போடக்கூடாதான்னுலாம் இல்ல) தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் பலம் சேர்க்கும்.

மார்கழி மாதம் தொடங்குவதற்கு முன்னரே கோல மாவு தயார் செய்து வைப்பதும், கலர் பொடிகள் வாங்கி வைப்பதும் தொடங்கிவிடும். சில கலர் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிப்பதும் உண்டு. உதாரனமாக காபி/ டீத்துளை உபயோகித்த பின்னர் அதை காயவைத்து உபயோகப்படுத்துதலும் உண்டு

கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார், இரண்டாம் தேதியன்று இரண்டு, இப்படி முப்பது தேதிகளுக்கு வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்தப் பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆல இலையின் மீது வைக்கலாம். பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து, தை மாத தொடக்கத்தில், கன்னிப் பெண்கள் அனைவரும் சேர்ந்து, நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள்.கன்னி பொங்கல் ன்னு ஒன்னு வைப்பாங்க அப்ப காஞ்ச சாண பிள்ளையாரை எருவாமட்டையா (வரட்டியா) கூட உபயோகிக்கும் வழக்கமும் சில இடங்களில் உண்டு.

சாண பிள்ளையாரையும் பூசணி, பூவையும் எதற்காக வைத்தார்கள் என்பதிலும் சிலருக்கு சந்தேகம் இருக்கும்.மார்கழி மாதத்தில் பூசணி பூ அதிகமாகப் பூக்கும் என்பதால் அந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். நல்லா ப்ரைட்டா கலர்ஃபுல்லா இருக்கும்ங்கறதால இருக்குமோ இருந்தாலும் மங்களகரமாக காணப்படும் கோலம். நம் கையில் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறு இருக்கறதா தெரியலை

மார்கழி மாதத்தில் வீட்டில் திருமணத்திற்கு தயாராய் இருக்கும் பெண்கள், அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் பிடித்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும் மார்கழியின் ஸ்பெஷல். அந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பையன் கல்யாணத்துக்காக காத்திருக்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து கொள்வர்களாம். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.

கோலமிடும் பெண்களின் குணநலன்களையும் இதில் அறிந்து கொள்வார்களாம். பொறுமை, சிக்கனம், சின்ன வாசலாகினும் பெரிய கோலங்களை போடுவதும்,படைப்பாற்றல் என ஒவ்வொன்றையும் அறிந்து கொள்வார்களாம். கோலத்தில் பிழை இருந்தாலும் அதனை சரி செய்யும் பாங்கில் பெண் மணமுடித்து போகும் வீட்டில் எவ்வாறு பொறுமை சகிப்புதன்மை,விட்டு கொடுத்து வழி நடத்தி செல்வதெல்லாம் தெரிந்து கொள்வார்களாம். ( இந்த காலத்து இளம்பெண்கள் கோலம் போடறாங்களா ??? அதையெல்லாம் வைத்து கணிக்க முடியுமா என்ன சந்தேகம் தான்)

கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படி அழகுடன் இருக்கிறதோ அப்படி கோலம் போடும் பெண்கள் வீட்டினையும் தங்களது அன்பாலும், பொறுமையுடனும் வீட்டையும் குடும்பத்தையும் அழகு பேணுவார்கள். நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்பது, நம் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் அழகான கோலம்தான். எதிர்மறையான எண்ணங்களோடு நம் வீட்டிற்குள் நுழைபவர்களைக்கூட நேர்மறையாகச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கோலங்களுக்கு உண்டு. 

கோலம் என்பதை நம் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக வாழ்வியலோடு , வழிபாட்டு முறைகள் இணைந்தது தான் நம் தமிழர்களின் பண்பாடு.அதனால் கோலமிடுவதை ஒரு வேலையாக நினைத்துச் செய்யாமல் ஒரு வழிபாடாக நினைத்து பயபக்தியோடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். 

அதையே நம் முன்னோர்கள் தெய்வத்தின்பால் தொடர்புபடுத்தி கோலம் இல்லாத வீடு மகாலட்சுமி வாழ விரும்பாத இடம். வீட்டின் வாசலில்தான் மகாலட்சுமி குடியிருப்பாள். மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை மங்களகரமாக வைத்திருந்தால், நம் இல்லங்களில் அவளின் அருட்பார்வை கிட்டும் என சொல்லிவைத்திருந்தனர். 

மார்கழி மாதத்தில் அதிகாலையில் தான் தூய ஆக்ஸிஜன் கிடைப்பதால், அந்த மாதத்தில் மட்டுமாவது அதிகாலையில் எழுந்து குளித்து நல்ல தூய்மையான ஆக்ஸிஜனை பெறுவதற்காக பெண்கள் கோலம் போடுவதற்கும், ஆண்கள் பஜணை செய்தபடி வீதி உலாவும் வருவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மற்ற மதத்தினருக்கும் இப்படி ஏதாவது ஒரு தொடர்பு இயற்கையோடு தெய்வத்தையும் கோர்த்து நடைமுறை படுத்தியிருப்பார்கள். கிருஸ்துவர்கள் இரவில் தொடங்கி அதிகாலையில் முடிக்கிறார்கள் தங்களது prayers யை இதே மார்கழியில் தான். 

பொதுவாகவே நமது உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் அதிகரித்துவிட்ட கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் இந்த மார்கழியில் அதிகாலையில் எழுவதால்..!!

வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கோலம் என இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் 8 இதழ் கொண்ட தாமரைக் கோலம் வாசலில் போடப்படுவது விஷேசமாக கருதப்படுகிறது.

கோலம் பற்றியான சில மூட நம்பிக்கைகளும் பரவாமல் இல்ல. சிக்கு கோலம் அதிகம் வாசலில் போடப் போட வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டே போகும் என்பதும் தவறான கருத்து ஆகும்.அதிகம் சிக்கு கோலம் போடும் பெண்கள் பொறுமையும்,நிதானத்துடன் ஆழமாக யோசிக்கும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

மனம் அமைதியும், உடல் நலனும், போதிய அளவில் ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்கும் போது இது இரண்டுமே எளிதில் கைவரப்பெறுகிறது. அதற்காக தான் மார்கழி கோலங்கள் சிறப்புறுகிறது. முன்பெல்லாம் வீட்டுக்கதவை திறந்தவுடன் முகத்தில் அறையும் மார்கழி பனிக் காற்றை சுவாசித்துவிட்டால் தும்மல் பன்மடங்கு வந்து அன்றைய நாளையே வீணாக்கிவிடும். உடலை பழக்கத்திற்கு கொண்டு வந்து சரி செய்யவே இந்த மார்கழியில் சவாலாய் எடுத்துக்கொண்டு கோலமும் போட்டாச்சு. எதுவும் பழக்கத்தில் வருவது தானே..

அதிகாலையில் நாம் செய்யும் செயலானது அன்றைய நாளுக்கான பலனாய் இருக்கும். நேர்த்தியில்லாமல் போட்ட கோலமெனினும் தவறை உற்று நோக்கினால் திருத்திக்கொள்ளலாம் எனும் தத்துவத்தை உணர்த்துகிறது. மனம் ஒன்றி செய்யும் செயல் தான் அழகும் நிறைவையும் தரும். கோலம் போடுவதிலும் அப்படியே.. எவ்வளவுக்கெவ்வளவு ஈடுபாட்டோடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நேர்த்தியை காண முடியும். 

கோட்டு கோலம் என்பது ஒரு முடிவிலி. நம் கற்பனையின் நீளத்திற்கு போட்டுக்கொண்டே போகலாம். நம் வாழ்வும் அது போல தான் நம் உழைப்பையும், திறனை வளர்த்துகொண்டே செல்ல செல்ல நம் வாழ்வானது அழகாகி கொண்டே செல்லும்.

புள்ளி கோலங்கள் சொல்வது வழிகாட்டியின் பின் சென்று அழகாகவும், அர்த்தமாகவும் மாற்றிக் கொள்வது, கோட்டுக் கோலங்கள் என்பது நம் மனம் சார்ந்து சுயமாய் உருவாக்கிக் கொள்வது.கோலங்கள் போடுவதை வைத்து கூட உளவியல் ரீதியாக அணுகலாம். மனதின் வெளிப்பாடு கண்டிப்பாக கோலத்தில் வெளிப்பட்டு விடும். 

தினசரி போடும் கோலம் கூட, மனம் ஒன்றாத பொழுதில் பிழை ஏற்படலாம். அதீத மன அழுத்தத்தில் போடப்படும் கோலங்களிலும் காணலாம். குடும்பத்தில் பெண்களின் பங்கு இங்கு அதிகம், ஆதலால் தான் பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலம் போடும் போது கவனம் முழுவதும் ஒரு நிலையில் குவிக்கப்பட்டு, அன்றைய நாளுக்குக்கான தியானமாய் கோலங்கள் திகழ்கிறது. 

அமாவாசைகளில் முன்னோர்களுக்கு படையலிடும் வீடுகளில் வாசலில் கோலம் இடுவதில்லை. வழக்கமான /விசேஷ நாட்களில் மட்டுமே கோலமட வேண்டும் என்றால், முன்னோர்கள் நாம் இடும் படையல்களை உண்டு நம்மை வாழ்த்த வரும் போது ஏன் கோலம் இடக்கூடாது என்பது புரியாத முரண்.

வீட்டு வாசல்ல எப்போதும் பெரிய கோலங்கள் போடுவதில்லை. பண்டிகை விஷேச நாட்கள் தவிர்த்து. வருடத்திற்கு மூன்று முறை கலர் கோலம் போடுvathundu PUத்தாண்டை வரவேற்கும் விதமாக எப்போதும் வண்ண வண்ண பொடிகளை கொண்டு வாசல் கோலங்களை அலங்கரிப்பது உண்டு. 

வண்ணங்கள் தூவி முடிக்க நேரம் எடுக்கும் என்பதாலும், போட்டு முடிச்சு உள்ள வரதுகுள்ள எதாவது வாகனத்தின் சக்கரம் கோலத்தின் மீது ஏறி கோலம் அழிந்து விடும். அவ்வளவு நேர உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலும் போடுவதில்லை. கோலங்கள் வாசலுக்கு அழகையும் நிறைவையும் தருகிறது என்றாலும் பெண்களுக்கு அது உடல் உழைப்பையும் மன உறுதியையும் கோருகின்றன.கோலம் போடுவதால் பொறுமையும் நிதானமும் வந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

கோலம் போடுவதற்கு எளிதாகவும், பார்ப்பதற்கு சிக்கல் நிறைந்த கடினமான கோலம் என தெரிந்தாலும் போட்டு முடித்தப்பின் அழகையும் நிறைவையும் தருபவையாக படிக்கோலங்களே எனக்கு பிடித்தமானவையாக இருக்கின்றது.

கோலத்தில் பல வகைகள் இருப்பினும், நெழிக் கோலம் எனப்படும் சிக்குக் கோலங்கள் எல்லோராலும் விருப்பப்படுவதில்லை. காரணம் தொடக்கம் எது..? முடிவு எது ?? என்று தெரியாததால் தான். ஆனால் சிக்கலின் தொடக்கத்தை தெரிந்து கொண்டால் எவ்வளவு குறுக்கு புள்ளிகள் வந்தாலும் அழகான கோலமாய் மாற்றி முடித்துவிடலாம். கோலங்களை உளவியலாய் பார்ப்பதற்கும் அதுவே காரணம். வாழ்வில் ஏற்படும் சிக்கலின் முடிவை நோக்கி ஓடுவதை விட, அதன் தொடக்கத்தை கண்டறிந்து விட்டால் முடிவை எளிதில் எட்டிவிடலாம் மிக அழகாய்.

கோலம் என்பது கோடுகள் புள்ளிகளின் அடிப்படையிலேயே அமைக்கப்படுவை என்றாலும் புள்ளிகளில் ஒரு கணக்கும், கோடுகளில் ஒரு நேர்த்தியும் தேவைப்படுகிறது. புள்ளிகள் கோலத்தின் வழிகாட்டியாகவும், கோடுகள் அழகான கோலத்திற்கு இணைப்பாகவும் செயல்படுகின்றன. வெறும் கோடுகள் தானே எங்கோ நுழைந்து எதில் வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பதில்லை. 

கோடுகள் திசைகளின் பண்பிற்கேற்ப அழகினை தரும். கோலத்தின் அடிப்படை விதி ஸ்வஸ்திக் என்றாலும் , மாற்று திசையில் போடப்படும் கோலம் அவ்வளவு நிறைவை தராது. கோலத்தில் முக்கியமாக பின்பற்ற வேண்டியதும் இதுவே.   குறிப்பிட்ட விதத்தில் கோலம் போடுவதன் மூலம் அந்த நேர்மறை சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை தொடர்ந்து செய்வதால் நிச்சயம் பலன் கிடைக்கும். வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்

கோலங்கள் எங்கு எவ்விதம் போடப்பட்டிருந்தாலும் நேர்மைறை அதிர்வை உண்டாக்கக் கூடியவை.காலையில் முதல் வேலையே அன்றைய நாளுக்கான மகிழ்வை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. மகிழ்வோடு தொடங்கி, பெண்கள் சிறப்பான நாளாக அன்றைய தினத்தை ஆக்கிக்கொள்கின்றனர் . 


Saturday, January 2, 2021

ஓரம் போ.. ஓரம் போ...

 வாழ்க்கை பயணத்துல பயணிக்க சில அத்தியாவசிய விஷயங்களை கற்று கொள்வது மிக முக்கியம் மட்டுமல்லாமல் அவசியமும் கூட. இன்றைய காலக்கட்டத்தில் அது ஆணோ பெண்ணோ இருவருக்குமே பொதுவாய் சில விஷயங்கள் அவசியம். அதில் முக்கியமானது சமையல் செய்வது, வாகனம் ஓட்டத் தெரிந்து கொள்வது.


இந்த காலத்தில் பெண்கள் சமைக்க கத்துக்கறாங்களோ இல்லியோ வண்டி ஓட்டக் கற்றுக் கொள்கிறார்கள். மாறாக ஆண்கள் சமைக்க கற்று கொள்கிறார்கள். என்னுடைய பதின்பருவங்களில் இவ்வாறு வாகனம் இயக்க கற்று தரும் பள்ளிகளும் குறைவு மற்றும் அதெல்லாம் பொட்ட புள்ளைக்கு எதுக்குண்ணு ட்ரைவிங் க்ளாஸ் லலாம் சேர்த்தியுட மாட்டாங்க. ஒரு சிலர் விதிவிலக்கு. அதுலயும் திருட்டுத்தனமா தோழிகளோட சேர்ந்து எப்படியாவது வண்டியோட்ட கற்று கொள்வதே பெரும் ப்ரயத்தனமா இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு வண்டி கத்துக்கிட்டதுல ஒரு வரலாறே இருக்கும் நீங்காத நினைவுகளாய்.


சைக்கிள் ஓட்டி கத்துக்கிட்ட கதையிலிருந்து ஆரம்பிப்போம்.

நான் நாலாவது படிக்கு போது தான் கத்துக்கிட்டேன்.அப்போ என் அண்ணன் 6 வது படிச்சுட்டு இருந்தாங்க.


அவங்க காசு சேர்த்தி வாரத்துல ஒருநாள் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவாங்க அவங்க ப்ரண்டுஸ் கூட.. (அப்போலாம் வாடகை சைக்கிள் தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்.)

கடைசி பத்து நிமிஷம் தான் கத்து கொடுப்பாங்க.அதும் 10 நிமிஷம் கழித்து நாம தான் சைக்கிளை கடைல விட்டுட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து வரனும்ங்கற கண்டிஷனோட...


எப்படியோ நமக்கு சைக்கில் கிடச்சா போதும்ன்னு சொல்லி சரின்னு சொல்லிடுவேன். அண்ணன் கொஞ்சம் வளத்திய இருந்ததால அவங்க பெரிய சைக்கிள் எடுத்துருப்பாங்க,அது எனக்கு உயரம் பத்தாது எப்படியோஅவங்க சட்டை பிடிச்சு ஏறி உக்காந்துப்பேன். சைக்கிள் ல பின்னாடி அவங்க பிடிச்சுப்பாங்க.நான் ஹாண்டில் பிடிச்சு அப்படி இப்படி வளைச்சு நெளிச்சு ஒட்டும் போது.................. அப்படியே பின்னாடி பிடிச்சுட்டு இருந்த கைய விட்டுடுவாங்க..


அவங்க விட்டுடாங்களேன்னு வர்ற பயத்துல, கை நடுங்கி, கால் உதறி, வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவம் இல்லாத உருண்டை ஒன்னு ஓடும்போது...... அண்ணே.. விட்டுடுடாத... பிடீய்ய்ய்ய்ய்ய்ய்... சொல்லிகிட்டே.... தொபுக்கடீன்னு விழுந்து வாருவேன்..


முகத்தை மட்டும் காப்பாத்திப்பேன். கை, கால்.முட்டி எல்லாம் சிராச்சு, அழுதுக்கிட்டே எழுந்துக்குவேன். “ ஏன் என்ன விழவெச்சன்னு அழுது கிட்டே கேட்பேன்.அண்ணே சைக்கிள் கத்துக்கனும்ன்னா அடிபட தான் செய்யும்.... போ போயி திரும்ப ஓட்டுன்னு சொல்லுவாங்க. ஒன்னும் வேனாம் போ.. நான் சைக்கிள விட்டுட்டு வீடுக்கு போறேன்னு சொல்லிடுவேன்.


அடுத்த நாளிலிருந்து நானும் காசு சேர்த்தி, எனக்கு தகுந்த குட்டி சைக்கிளா பார்த்து வாடகைக்கு எடுத்து, கீழ விலாம ஓட்டி கத்துக்கிட்டேன்.


சில வருடங்களுக்கு முன் விஷாலுக்கு புது சைக்கிள் வாங்கினோம். ஒரு ஆசை சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாச்சே ஓட்டலாம்ன்னு.. பயபுள்ள உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா ம்மான்னு கேட்டுட்டான்.. 


ஆஹா...அப்படி சொன்னதுக்கப்புறம் ஓட்டாம இருக்கறதா... விடாத பிரவீ இது உன் தன்மானப் பிரச்சனை... அப்படின்னு சொல்லிட்டே சைக்கிள் ல ஏறி உக்கார்ந்து பெடலை மெதிக்கறேன்.. மெதிக்கறேன்...நகர்ந்தபாட்டை காணோம்..அப்புறம் ஏறி நின்னு மிதிச்சு எங்க வீட்டு தெரு முக்கு வரைக்கும் போயிட்டு வந்துட்டேன்.


வந்தா...


விஷால் அவங்க அப்பாகிட்ட கேட்டுட்டு இருக்கான்..”சைக்கிள் எவ்வளோ லோடு தாங்கும்” என்று.. இப்ப வரைக்கும் சைக்கிள் நன்றாக தான் இருக்குது. ஓட்டி ஒட்டி உடைஞ்சது கையும் காலும் தான்.


எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் எனக்கு உண்டு. நம்மால் முடியுமா?? முடியாதோ ? என எந்த ஒரு முன் முடிவுகளும் இன்றி கற்றுக் கொள்ள தயாராய் இருப்பேன். அப்படி ஒவ்வொன்றாய் கற்று கொண்டது தான் தையல், அழகுகலை,  சாக்லெட், மாரத்தான் ஓட்டம் ,ஓவியம், எம்ராய்டரி என இப்படியாக கற்றுக்கொண்டவை ஏராளம்.. இதை நம்மூர் சொலவடையா "நாய் வாய் வெச்ச மாதிரின்னு" சொல்வதும் உண்டு. ஆனா எனக்கு எல்லா விஷயங்களையும் கற்று தெரிந்து கொள்ளவேண்டும் அவ்வளவே. அதில் சிறப்பு பெற வேண்டும் என்பதெல்லாம் இல்லை, எனக்கு தெரியும் என்பதே போதுமானதாய் திருப்தியாய் இருக்கும்.


சைக்கிள் ஓட்டி பழகியதும், டூவீலர் ஓட்ட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அப்போலாம் வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருக்கும் அவ்வளோ தான். டூவீலர் கார் லாம் நல்லா வசதி படைச்சவங்க வீட்ல தான் இருக்கும். 


பெரிய அண்ணன் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போக லோன் ல டூவீலர் வாங்கினாங்க. சைக்கிள் க்கு காத்தடிச்சா போதும் டூவீலர்க்கு   பெட்ரோல் போடனுமே..அண்ணன் அதை பத்திரமா வெச்சுருப்பாங்க வண்டி சாவி உட்பட.


அப்ப T.V.S 50 தான் பட்ஜெட் வண்டி. குறைந்தபட்சம் நடுத்தர மக்களால் வாங்கக்கூடிய விலையில் இருக்குமென்பதால். அண்ணனுக்கு வாரத்துல ஒரு நாள் தான் விடுமுறை இருக்கும். வாரம் முழுக்க அண்ணன் சொல்லறதெல்லாம் கேட்டு, அவங்களுக்கு வேலை செய்து கொடுத்தா ஞாயித்துக்கிழமை ஓட்டி பழகலாம். அதுவும்  ஒரு மணி நேரம் ஓட்டி பழகிட்டு வந்ததும் சுத்தமா வண்டியை கழுவி துடைச்சு சுத்தம் பண்ணிக் கொடுக்கணும். 


படிச்சு முடிச்சதும் வேலைக்கு சென்றதும் கூட பொது பேருந்தை தான் உபயோகப்படுத்த வேண்டிய நிலை தான். அலுவல் வேலையாக செல்ல அலுவலகத்தில் ஒரு பழைய மாடல் கைனடிக் ஹோன்டா இருந்தது. 


ஊருக்கு வெளியே அலுவலகம் என்பதால் பக்கத்திலிருக்கும் வங்கி வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு வர வண்டி எடுத்து கொண்டு செல்ல அனுமதி உண்டு.


ஆபிஸ் ஸ்டாஃப் இருந்தாலும் சில நேரம் வாலன்ட்டியராக வங்கி செல்ல உதவி புரிவது போல் வண்டி எடுத்துக் கொண்டு ஒரு ரவுன்டு கிளம்பி விடுவேன்.போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு முறை சென்ற போது, ஒரு திருப்பத்தில் வண்டியை முன் பகுதியை பார்த்துக்கிட்டே வளைக்க சக்கரத்திற்கு மேல் இருக்கும் திரும்பலயே என யோகிக்கும் பொழுதே சக்கரம் முழுவதுமாக திரும்பிவிட நிலை தடுமாறி அங்கேயே விழுந்து வாரியதெல்லம் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியவை


கற்றுக்கொண்டும்  செயல்படுத்த முடியாது, செயல்பட முடியாது என பயந்த ஒரு விஷயம் கார் ஓட்டுவது... டூவீலரில் இண்டு இடுக்கு, சந்து பொந்து., டிராஃபிக்லைலாம் கூட 8,ஏழரை லாம் போட்டு ஓட்டும் அளவுக்கு பழகி விட எனக்கு, டூவீலரில் பறக்கும் எனக்கு, 

(அப்பாவின் ஆபிஸர்ஸ், அண்ணாவின் தோழர்கள், உறவினர்கள் என அத்தனை பேரின் புகாரும் உண்டு ;)  )  கார் ஓட்ட வேண்டும் என சொன்னாலே மிகுந்த கொலநடுக்கம் வரும்.  லைசன்ஸ் வாங்கியதும் முதல் நாள் காரை ஓட்ட எடுத்ததும் அது சர்ர்ர்ர்ர்ர்ர்ர் என  ஜாதிமல்லி கொடியின் பந்தலில் முட்டி போதி சேதமாக்கியது தான் பயத்திற்கு காரணம்.. ( ஜாதியை ஒழித்தவள் என பெருமைலாம் பட முடியல, உருட்டு கட்டையை எடுத்துக்கிட்டு அம்மா தான் ஓடி வந்தாங்க :'(   )

அப்பவே கார் ஓட்ட வேனும்ங்கற ஆசை போயிடுச்சு.


கிட்டத்தட்ட 8 வருஷம் கழிச்சு, ஆசை மீண்டும் எழ Personal driver இருந்தா நம்முடைய  கார்ல ஓட்டி பழகினோம்ன்னா தான் சரியா கத்துக்க முடியும் ன்னு யோசிட்டு  அதற்கு சரியான trainer அ தேடிட்டு இருந்தேன். ஆள் கிடைச்சா நேரம் ஒத்து வராது... ஆள், நேரம் எல்லாம் கிடைச்சா அவங்க கேக்கற தொகை "அம்மாடி"ன்னு இருக்கும். 

  

பின் எப்படியோ தேடி பிடிச்சு ஒரு பெர்சனல் கோச் கிடைச்சாரு...வெறும் 6 நாள் பயிற்சி போதும், என கூறி நம்பிக்கையளித்து, மிக முக்கியமாக என்னுள் இருந்த பயத்தை நீக்கி, பதட்டத்தை குறைத்து, பொறுமையா கற்று கொடுத்தார். சின்ன சின்ன திட்டுகள் விழும் தான் ஆனா திட்டற மாதிரியே தெரியாமா ;) 


ஊக்கப்படுத்தி, ஒரு நண்பனை போல் தைரியமுட்டி கற்று கொடுத்தார்.. என் வீட்டிற்கும் அம்மா வீட்டிற்கும் இடையில் மூன்று கி.மீ மட்டுமே உள்ள தூரத்தை நான் தனியாக கார் ஓட்டினேன் என்பதே மிகப்பெரிய சாதனை என  நினைத்து மகிழ்ந்திருக்கின்றேன்.


கார் ஓட்ட பழகும் போது, "அப்படியே கார் ஓட்டிட்டு வந்து நம்ம வீட்ல நிறுத்தேன் மா" என இறுதியில் கேட்ட அப்பாவிடம், 

"அப்பா நான் கார் ஓட்டிட்டேன்"  என மனதிலிருந்து உரக்கச் சொன்னேன் எங்கிருந்தாவது அவர் கேட்பார் எனும் நம்பிக்கையில்..


கார் ஓட்டி பழகிய இந்த ஒன்னரை ஆண்டுகளில் ஒருவித தன்னம்பிக்கை கூடுதலாய் கிடைத்துள்ளது என்பதை உணர முடிகிறது. தனியாக தைரியமாக எங்கும் செல்லும் துணிச்சலையும் கொடுத்துருக்கிறது. கூடுதலாய் என்மீது நானே நம்பிக்கை கொள்ள செய்திருக்கிறது.