Monday, November 30, 2020

காட்டு வழியே..

 ஒரு பயணம் நினைவை மீட்டவோ, கூட்டவோ செய்யலாம்..!! அப்படியான நினைவுகளை அள்ளிதரும் பயணமொன்றை மிகச்சரியாக ஒரு வருடம் கழித்து நினைவுகளில் மீட்டிப்பார்க்கிறேன்.மனமொத்தவர்களோடு செய்யும் பயணங்கள் ஒரு போதும் அலுப்பை தராதவை. 

நினைவுகளை நிரப்பிக்கொண்டாலும் சுமையாய் வலி கூட்டாதவை. அதுவும் நண்பர்களோடு செல்லும் பயணம் என்பது துளியும் உற்சாகம் குன்றாதவை. அதற்கு தோதான சக பயணிகள் அமைய வேண்டும். இங்கு வயதென்பது வெறும் எண்கள் தாம். அவ்வாறு மனது ஒத்தவர்களோடு ஒரு பயணம் சென்ற ஆண்டு இதே நவம்பரில் இரு நாட்கள் பயணித்திருந்தேன்.

தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டத்தை சேர்த்தவர்கள் அந்த குழுவில் பதிவு செய்து சென்றிருந்தோம். அதில் மிக குறைந்த அளவில் சிலரை மட்டுமே முன் அறிமுகம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களாகவும், தொழில் முனைவோர்களும், இல்லத்தரசிகளும், தங்களுடைய ரிட்டயர்மென்ட் வாழ்வில் புதிதாய் வாழ தொடங்கியவர்களும் வந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது..

 செல்லும் இடம் தெரியாது மேற்கொள்ளும் பயணம்  கூடுதல் சுவாரசியங்களைக் கொடுக்கத் தவறுவதேயில்லை. இந்த முறை அப்படியான  பயணம் தான் என்றாலும் தோழிகள் நிறைய பேர் என்பதால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கூடுதல் உற்சாகத்தோடு கிளம்பியாயிற்று. வரலாற்று சிறப்பு மிக்க இடமான உடுமலையிலிருந்து  மூணார் செல்லும் வழியில் உள்ள  மறையூர் & காந்தளூர் என முடிவாகியிருந்தது.

பயணத் திட்டங்கள் பற்றி வாட்சப் குழுவில் விவாதித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. கூடவே விர்ஸுவல் அறிமுகமும்.  ஒரு வாரத்திற்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்ட  குழு என்பதால் ஒவ்வொருவருக்குள்ளும் நல்  நட்பு வளரத்துவங்கியது. கொண்டு வர வேண்டிய பொருட்கள் பட்டியல் இடப்பட்டது கூடவே ஸ்நாக்ஸ் பற்றியும். சிலர் தங்கள் கையாளே வீட்டில் செய்து எடுத்துவருவதாகவும், கடையில் வாங்கி வருவதாக சிலரும் தெரிவித்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஏற்படுத்தியது. 

பயணம் கிளம்பும் நாள் வரையிலும் உற்சாகம் குறைவில்லாது கலகலப்பாய் அரட்டை கச்சேரி களை கட்டியது. ஒவ்வொருவரும் பல்வேறு இடங்களில் இருந்து வருபவர் என்பதால், மையமாக  கோவை, பல்லடம், உடுமலை என மூன்று பிக் அப் பாயிண்ட் குறிக்கப்பட்டது.சென்னை, மயிலாடுதுறை, காரைக்குடியிலிருந்து தோழிகள் முதல் நாளே கோவை வந்து சக பயணியின் வீட்டில் தங்கி விட்டனர். 

கோவையிலிருந்து மற்றும் சிலரை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸில் நானும் மற்றும் சில தோழிகளும் ஈரோட்டிலிருந்து காரில்  சென்று பல்லடத்தில் ஏறிக்கொண்டோம். அங்கிருந்தே ஆரம்பமாகியது கலாட்டாவும் & ஆட்டமும் பாட்டு கச்சேரியும். உடுமலையில் சிலர் ஏறிக்கொள்ள, மறையூர் நோக்கி செல்லத் துவங்கியது பேருந்து.

ஒருவாறு அனைவரது அறிமுகப் படலமும் நடந்து முடிய காலை உணவிற்காக ஒரு தோட்டத்தின் ஓரத்தில் நிறுத்தி பரிமாறப்பட்டது கோவையிலிருந்தே கொண்டுவரப்பட்ட உணவுகள். ஓவ்வொருக்கொருவர் பரிமாறிக்கொண்டது உணவு மட்டுமல்ல கூடுதலாய் கொஞ்சம் அன்பையும், ப்ரியத்தையுமே..! கூடவே சில செல்ஃபிகளும் ,க்ரூப் போட்டோகளும் எடுத்துக்கொண்டு  பயணத்தை தொடர்ந்தோம்.

உடுமலையிலிருந்து 40 வது கி.மீ ல் இருக்கும் மறையூர் நுழைகையிலேயே அங்கு தங்கவிருக்கும் ரிசார்டின் உரிமையாளர் நெளஃபலும், அவரது நண்பர் பாரதியும் வரவேற்றனர். பயணக் களைப்பை போக்க இளநீர், கடுங்காப்பி, தேநீர் என சுவைத்து இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலையையும் , அதிலிருந்து உருண்டோடி வரும் சிற்றறிவிவையும் ரசித்தபடியே தங்கும் விடுதி நோக்கி சென்றோம்.

அழகிய பாக்கு மரத் தோட்டத்துடன் கூடிய விடுதியை 11 /12 மணி வாக்கில் சென்றடைந்தோம். புதினாவும், எலுமிச்சையும் கலந்த வெல்கம் ட்ரிங்குடன் வரவேற்றார்கள். ஒவ்வொருவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட, இருவர் தங்கும் அறைகள் மிகவும் வசதியாக, அதே சமயம் கச்சிதமான அறைகளாக இருந்தது. 

அவரவர் அறைக்கு சென்று ரெவ்ஃபரஷ் ஆகி உணவு கூடத்தில் குழுமத்தொடங்கினோம். அவரவர் கதைகள், பாட்டு, கிண்டல் பேச்சுக்களும் சிரிபொலியும் கூடத்தையே அதிரச்செய்தது. அப்போது எங்களுடன்  சக பயணியாய் வந்த ஃபாத்திமாபாபு மேம் எல்லோருக்கும் ரேம்ப் வாக் சொல்லித்தர, மேடை இல்லாமலே அனைவரும் ரேம்ப் வாக் செய்து அதகளப்படுத்தினோம்.சிரித்து சிரித்து வயிறு நிறைந்து கொண்டிருக்க அதே வேலையில் மதிய உணவும் தயாராகி இருந்தது. பேச்சின் நடுவே சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டு பின்பு ஒவ்வொருவராய் ஓய்வெடுக்க அறைக்கு சென்றோம்.

சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் அனைவரும் தயாராகி அருகிலிருக்கும் அனகொட்ட பாற என்னும் பாறை குகை கோவிலுக்கு சென்றோம். 

மூணாறு போற வழியில் உள்ள முக்கியமான ஒரு ஊரான மறையூர். கிட்டத்தட்ட வளர்ந்த கிராமமாகப் தெரிந்தது. அங்கிருந்து ஒரு ரோடு காந்தளூர் போகிறது. இடைப்பட்ட அந்த ஜங்க்சன் தான் மறையூர்.

மறையூரில் நிறைய கிறிஸ்தவ சர்ச்சுகள்,ரிசார்ட்ஸ் ஹோட்டல்கள் இருக்குகிறது. அந்த ஏரியாவில் நிறைய தோட்டங்கள், டீ எஸ்டேட், அருவிகள், கோவில்ன்னு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. முக்கியமா தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடுகள் காப்பகம் பார்க்க வேண்டிய ஒன்று.

நாங்கள் சென்ற முனியரா - அனகொட்டபாற வ்யூ பாயிண்டல்டில் கோவில் ஒன்றும் இருந்தது. ராமர் வனவாசம்  சென்றபோது ஒய்வெடுத்த இடம் எனவும். பஞ்ச பாண்டவர்கள் ஒளிந்து கொண்ட இடம் எனவும் பலகதைகள் நிலவுகிறது. அங்கு ஒரு ராமர் கோவிலும் இருக்கிறது. அந்த பாறை மலையின் மீது ஏறிப் பார்த்தால் மறையூரின் மொத்த  அழகும் காண முடிந்தது.

அங்கு நிதானமாக இயற்கையின் அழகை ரசித்து கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே பாரதியும் நெளஃபலும் சுடச்சுட பழம்பொரியும், டீயும் அங்கே கொண்டுவந்து கொடுக்க, இயற்கையை ரசித்தபடியே சிறு தீணியையும் ருசிப்பதும் மகிழ்வை கூட்டியது. அதே மகிழ்வோடு ரிசார்ட் வந்து சேர்ந்த போது கேம்ப் ஃபயருக்கு ஏற்பாடாகி இருந்தது. கூடவே பார்பிகியூவிற்கும். அந்த மிதமான குளிருக்கு இதமாய் இருந்தது. ஆட்டமும் பாட்டும் அந்தாக்ஷரி என களைகட்டியது இரவு விருந்தும்.ஏனோ மனம் அதில் ஈடுபடாமல் தனித்திருக்கவே செய்தது. மனதில் குழப்பம் சூழ கூட்டத்தினுள் தனிமையை தேடி களைத்தது. விரைவாக அறைக்கு வந்து படுத்துவிட்டேன். மொபைல் சிக்னல் அப்பப்போ தான் கிடைத்ததும் காரணமாய் இருக்கலாம் என சமாதானப்படுத்திக் கொண்டே உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் ஒர் ஆச்சரியம் காத்திருந்தது அனைவருக்கும் ஒரே மாதிரியான டீசர்ட் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நல்ல மாம்பழ மஞ்சளில் அன்று பூத்த சாமந்தியை போல் மலர்ந்து மிளர்ந்தனர் அனைவரும். ஒரே மாதிரியான உடையில் க்ரூப் போட்டோ ஒன்றை எடுத்து நினைவு பரிசுக்காக பத்திரப்படுத்தி கொண்டாயிற்று. 

காலை உணவை முடித்துக்கொண்டு மாற்று உடை ஒன்றை எடுத்துக்கொண்டு, மறையூரிலீருந்து 5,6 கீமி பக்கத்திலிருக்கும் தூவானம் அருவி நோக்கி புறப்பட்டோம். அங்கு வனசரகத்தினரிடம் அனுமதி மற்றும் நுழைவுசீட்டு பெற்று காட்டு வழியே நடக்கத்துவங்கினோம். 

கேரளாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அந்த மாநிலத்திற்குள்ளாகவே ஓடி கடலில் கலப்பவையாம். பாம்பாறு மட்டுமே இரண்டாக பிரிந்து ஒன்று வால்பாறை நோக்கியும் இன்னொன்று எல்லை கடந்து இங்கு தமிழக எல்லையான மறையூரில் தூவானம் அருவியாய் கொட்டுகிறது. அந்த அருவியை காண சொல்லும் வழி என்பது காட்டு வழிப் பாதை மட்டுமே.

மிகச்சாதாரணமாக எண்ணி நடக்க ஆரம்பிக்க நுழையும் இடமே மிரட்டத்துவங்கியது .  சாலையிலிருந்து காட்டிற்குள் நுழையும் இடமே மிகச்சரிவான மலைப்பகுதியாய் இருந்தது மனதிற்குள் கொஞ்சம் மிரட்சியைத் தந்தது. ஒருவாறு சமாளித்து நடந்து கீழ் இறங்கும் வேளையில் உடன் வந்த சாந்தி ம்மா சறுக்கி விழ, அவர்களை தூக்கி,தேற்றி பக்கத்தில் உள்ள கிளையில் ஒரு கொம்பை உடைத்து ஊன்றுகோல் ஒன்றை கொடுத்து உடன் அழைத்து வந்தோம். இங்கு ஒன்றை சொல்ல வேண்டும் அவர்கள் வயதில் நான் நடப்பேனா என்பதே சந்தேகம். தைரியமனுசி நான் பார்த்ததில். வயதென்பது வெறும் எண் என்பதை நிரூபித்தவர். இதற்கிீடையில் மற்றவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, அரசு அனுப்பி  வைத்த செக்யூரிட்டீஸ் உடன் அவர்கள் அருவியை நோக்கி சென்று விட்டிருந்தனர். 

 உடன் வந்த செக்யூட்டரியிடம் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்கும் போதெல்லாம் சினிமாவில் வருவது போல் " தோ (2) கி.மீ எனக் கூறிக்கொண்டே 4, & கிமீ நடக்க வைத்திருப்பார். கற்களும் பாறைகளுக்கும் இடையில் காட்டு வழியில் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே அந்த பச்சயத்தின் வாசனையோடு நடை என்பது அளாதியானதாய் இருந்தது. இடையிடையே குறுக்கிட்டு செல்லும் ஓடையும் அருவியின் சப்தமும் கேட்டபடியே நடந்ததினால் அலுப்பு துளியும் இல்லை.

எல்லாவற்றையும் கடந்து வந்து அந்த அருவியை காணும் போது வானில் இருந்து தூவலாய் கொட்டிக்கொண்டிருந்ததாலோ" தூவானம் என்று அழைக்கப்படுகிறது எனும் ஐயம் தோன்றாமல் இல்லை.

ஆற்று நீரில் ஆட்டம் போட்டதில் நேரம் போனதே தெரியவில்லை எல்லோருக்கும். மதியம் உணவை அங்கே அருவிக்கே சுமந்து வந்து அன்பை கூடுதலாய் பகிர்ந்து கொண்டனர் விடுதியினர்.

தண்ணீரில் ஆடிய களைப்பும் உண்ட களைப்பு சேர மீண்டும் மலையேற்றம் என்பது காட்டுவழிப்பாதை, ஓடை, பாறை என திகிலூட்டியது. போகும் போதே எளிதாய் இருந்தது என என்னும்படி திரும்பி செல்வது இன்னும் கடினமாக்கியது. மலை ஏற்றம் என்பதால் கொண்டு வந்த தண்ணீர் அனைத்தும் காலியாகியது  தாகத்தில் பாதி வழியிலேயே..

ஆங்காங்கே ஓய்வெடுத்து எடுத்து, எப்படியோ மலையேறி பேருந்தை கண்டதும் ஈடில்லா மகிழ்ச்சி. சாலையின் நடுவில் அமர்ந்து போட்டோ எடுத்துகொண்டதெல்லாம் புது வித அனுபவம்.

அங்கிருந்து மாலை கிளம்பி காந்தளூர் வந்து சேர்ந்தோம். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி,லெம்ன் டீ, லெமன் சோடா என அருந்தி ரெஃபரஷ் செய்து கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

வண்டி இருட்டான பாதையில் சென்று கொண்டிருக்க ட்ரைவர் எதுவும் சொல்லாமல் அனைத்து ஜன்னல் கதவுகளையும் மூடச்சொன்னதும் அனைவரையும் திகிலுறச்செய்தது. மெல்லல்ல் ல்ல்ல் நகர்ந்த வண்டியும் அச்சமூட்டியது.ஒரு வழியாக சமாளித்து ரிசார்ட் வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து இறங்கியது ட்ரைவரிடம் கேட்டதற்கு சாலையில் மின் ஒயர் அருந்து விழுந்திருந்தது, மேலும் மலை பாதை இருட்டாக இருந்ததினால் உங்களின் பாதுக்காப்பிற்காக சொன்னேன் என்றதும் தான் மனம் ஆசுவாசம் அடைந்தது.

இருள் கவியத்தொடங்கி, மிதமான பனிப்பொழிவோடு குளிரத்தொடங்கியது. அறைக்கு செல்லும் முன்னமே காபி அருந்தினால் தான் ஆச்சு என ரிசார்ட்டின் கிச்சன் நோக்கியே சென்று விட்டோம் நானும் இன்னும் சில தோழிகளும்.காபியோடு & ஸ்நாக்ஸ்யும் தயாராய் இருந்தது.

இரவு உணவுக்கு சின்ன விளையாட்டு ஒன்றை சாந்தி ம்மா அறிமுகப்படுத்த விளையாட்டின் சூட்சமம் தெரியாமல் தாங்களாகவே மாட்டிக்கொண்டு தோழிகள் முழித்தது பெரும்  சிரிப்பை வரச்செய்தது.

பின்பு அவரவர் கடந்து வந்த பாதைகளை பற்றி பகிர்ந்து கொண்ட போது, பெண் என்பவள் மகா சக்தி என நிரூபனமானது. அதில் ஒரு " சூர்யவம்சம்" . " காதலுக்கு மரியாதை"   என சினிமாவைவிட நிஜத்திலும் அதற்கும் மேலான சவால்களை சந்தித்து கடந்து வெற்றி யும் பெற்றிருக்கிறாற்கள். கேன்சரை வென்ற  சுகுனா ம்மா. என வாழும் உதாரணகளை கண்டதுமே பெரும் உத்வேகம் இனி வரும் ஆயுட்காலத்திற்கும்.

இரவு உணவு முடித்து அரட்டை கச்சேரி. சீட்டாட்டம். பல்லாங்குழி என உறக்கம் வரும் வரை தொடர்ந்தது. எப்போது தூங்கினோம் எழுந்தோம் எனத்தெரியாது. காலை உணவுக்கு பின் குளித்து மலைமுகட்டை போட்டோ எடுத்துகொண்டு கூடவே சிலபல செல்ஃபிகளை தேற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்ப ஆயத்தமானோம்..

மதிய உணவையும் முடித்து கிளம்பும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது கட்டி இழுக்காத குறையாக அனைவரையும் வண்டியிலேற்றி ஊருக்குத் திரும்பினோம்.

இந்தபயணத்தில் ரசித்த இடங்களை காட்டிலும், ருசித்து சாப்பிட்ட உணவுகளே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் வேளாவேளைக்கு நமக்கு யாராவது செய்து தரமாட்டார்களா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடே இம்மாதிரியான சுற்றலாவிற்கு செல்வதன் காரணமாகவும் இருக்கும்.

உடலும் மனமும் லகுவாகி, புது உற்சாகத்தோடு திரும்பிக் கொண்டிருக்கையில் பேரிடியாய் பெரும் சுமையாய்  இறங்கும் செய்தியை கனத்த மனதோட ஏற்க தயார்படுத்த தானோ அத்தனை கொண்டாட்டமும் மகிழ்வும் என கேட்டுக்கொண்டே மருத்துமனை நோக்கி ஓடினேன். வருகைக்காக காத்திருந்த ஆத்மாவின் கண்களில் நிம்மதி சூழ்ந்தது.