Saturday, August 29, 2020

மெளனச் சிதறல்

 மெளனத்தில்,

விரும்பி தேர்ந்தெடுத்த

ஒவ்வொரு சொற்களையும் 

இட்டுத்தான்

நிரம்பிக்கொண்டிருக்கிறேன்...


தழும்பி வெளிவரும்

சொற்கள்

உன் ப்ரியத்தின்

வாசம்தனை

சுமந்து

கரை தழுவட்டும்.,

இல்லையேல்,


பட்டுத்தெறிக்கும்

சொற்களின்

அழுத்தம் தாளாது

பேரன்பின் பிரவாகமாக

கொட்டித்தீர்த்துவிடு,!!


எனக்கான  

சொற்களென்பது

உனதானது மட்டும் தானே..!!

Tuesday, August 11, 2020

பார்வையின் எச்சம்...

 பார்வையில் விலகி,

சொற்களில் பிரிந்து,

வெகுதூரம் சென்றபின்னும்

நினைவுகளில் ஏன்

நெருங்குகிறாய்..?


ஞாபங்களின்

அடுக்குகளில்

ஒவ்வொன்றாய் 

களைந்த பின்னும்

மிச்சமிருப்பது,


முதல் முத்தமோ

முதல் ஸ்பரிசமோ

முதல் சொல்லோ

அல்ல


கடைசி நொடி

தீன்டலும்

கடைசியாய்

உதிர்த்த

சொல்லொன்றும்

எல்லாம்

முடிந்து

பிரிகையில்

விட்டு சென்ற

பார்வையில்

திக்கி நிற்கிறேன்


மீண்டும் 

ஒருமுறை

இறப்பதற்கு..!!

Sunday, August 2, 2020

ஆடி பெருக்கும்,தூரி நோம்பியும்...

திருவிழாக்கள் பொதுவாகவே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்திவிடும். கொண்டாட்ட மனநிலையும் திருவிழாக்கோலம் பூனும். ஆடி மாதம் தொடங்கிய உடனே ஆங்காங்கே இருக்கும் கோவில்களில் திருவிழாக்கோலம் தொடங்கிவிடும்.கம்பம் இடுதல், முளைப்பாரி போடுதல், மாவிளக்கு படைதல், கெடா வெட்டுதல், மஞ்சள் நீராட்டல் என தொடரும் நிகழ்வுகளில் பக்தி கொண்டாடப்படும்.பக்தி மனம் கமழும் பாடல்கள் வீதிதோறும் பெரிய ஒலிபெருக்கி கொண்டு ஒலிக்கச் செய்யப்படுவது, ஊரே திருவிழாக்கோலம் பூண்டதற்கு
அறிவிப்பாய் அறியப்படும். அவ்வப்போது வான வேடிக்கைகளும், கலர்கலராய் ஒளிரும் விளக்குகளும், சாலை ஓரமெங்கும் சிறு சிறு கடைகள் திருவிழாவிற்கு வண்ணஒளி கூட்டுபவையாக அமைந்திருக்கும். 

பால்யத்தில், ஆடி மாதம் என்பது கூடுதல் மகிழ்வை ஏற்படுத்துவதாக இருந்ததற்கு காரணம் வீட்டில் எனக்கு  மட்டும் ஸ்பெஷலாக புத்தம் புது துணி கிடைப்பது தான்.வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளை காவேரி தாயாய் மதித்து  சீர் செய்வதனால். ஆடி பெருக்கன்று புது துணி உடுத்தி, ஆற்று மணல் எடுத்து நீர் இட்டு பிள்ளையார் பிடித்து, காதோலை காப்பும் கருகுமணி வளையலும் , மஞ்சள் கயிறும் வைத்து, பச்சை அரிசியும், வறுத்த பாசிப்பயிறும் சேர்த்து வெல்லம் கலந்து செய்யப்படும் காப்பரிசியும்  அப்போதைய விளைச்சல் ஆனா பேரிக்காய், கொய்யா என பழங்கள் வைத்து  வழிபடுவது முக்கியமாக கருதப்படும்.ஆற்று மணலையே காவேரித்தாயாக எழுந்தருள்வதாக பூஜை செய்து வழிபடுவார்கள்.

சிறுவயதில் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கருப்பராயன் கோவில் இருந்தது. பல காலமாக வெறும் கருப்பராயன்  கோவில் என்று மட்டுமே அறிந்திருந்தேன். சம்பந்தமே இல்லாமல் நகரின் மத்தியில் எப்படி கருப்பராயன் கோவில் இருக்குமென்ற சந்தேகம். பொதுவாகவே கருப்பராயன் எல்லைச்சாமியாகவும், காவல் தெய்வமாக மட்டுமே அறியப்பட்டிருப்போம். ஆனால் எல்லை சாமியும், ஏரி காத்தவருமான கருப்பராயனை சுற்றி நகரம் தன்னை வளர்த்திக்கொண்டது ஏரியை அழித்து.ஈரோட்டின் மையப்பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகதின் எதிரில் இருக்கும் சுமார் 1 கிமீ சுற்றளவு கொண்ட ஏரியில் தற்போது இருப்பது தமிழ்நாடு ஹவுஸிங் யூனிட்டின் குடியிருப்புகள். வற்றி போன ஏரியின் மீதே உள்ளது இந்த குடியிருப்புகள் அதற்கு மத்தியில் தான் இந்த கோவிலும் எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து உள்ளது. ஏரி கருப்பராயன் கோவில் சென்று வழிபாடு போதெல்லாம், ஏரியை காக்க முடியாத கருப்பராயன், எம் குலம் காப்பது எவ்வாறு எனும் கேள்வி உள்ளுக்குள் ஓடாமல் இருந்ததில்லை.

ஆடி மாதம் நீர்நிலைகளின் அருகில் இருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், நோன்பியும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறே ஏரி கருப்பராயன் கோவிலிலும் திருவிழா தொடங்கிவிடும். ஆடி 18 அன்று விஷேஷ பூஜை என்று களைக்கட்டும். ஆடி மாதம் 3 நாள் முளைப்பாரி போட்டு வேண்டுதல் தொடங்குவர். பதினெட்டாம் நாள் அன்று மாவிளக்கும் முளைப்பாரியையும் கருப்பராயனுக்கு படைத்து வணக்கி செல்வர். சிலர் கோவிலிலேயே புது பொங்கல் இட்டு சேவல் அறுத்து படையலிடுவர்.

ஆடி பதினெட்டாம் நாள் அன்று பெரிய பண்டாரம் மணிகளும், சலங்கையும் மாட்டிய சூலத்தை எடுத்து ஆடுவார். பார்ப்பதற்கு மிகுந்த அச்சத்தோடு கலந்த பக்தியை நமக்குள் ஏற்படுத்தும். அவர் சூலமெடுத்து ஆடும் போது கருப்பராயனின் அருள் அவர் மீது வருவதாக ஐதீகம். அன்று முழுவதும் கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.கூட்டநெரிசலில் சென்று வழிபடுவது என்பது மேலும் புது உற்சாகம் தருவதாய் இருக்கும்.

காலையில் வீட்டில் பூஜை முடித்து , உச்சிகால பூஜைக்கு சென்றுவிடுவது வழக்கம். வீட்டலிருந்து 50 அடி தூரமே என்பதால் உச்சி கால பூஜை மணியடித்ததும் முண்டி அடித்துக் கொண்டு ஓடுவோம். அதற்குள் கூட்டம் கூடி கோவில் வாயிற்படி வரைக்கும் நீண்டிருக்கும். மற்ற நாட்களில் இவர்களெல்லாம் எங்கிருப்பார்கள் எனும் அலுப்பான கேள்வியோடு கூட்டத்தினுடே நுழைந்து, பண்டாரம் மணி கட்டிய சூழல்மேந்தி அருள் வந்து ஆடுவதை பார்க்க முன் வரிசைக்கு சென்று விடுவோ. அடுத்த இரண்டு நாட்களுக்கு கருப்பசாமியா பண்டாரம் கனவிலும் வந்து பயங்காட்டுவார் அது தனி கதை. பால்யத்தில் பக்தியாய் கோவிலுக்கு சென்றதை காட்டிலும், கொண்டாட்டமாய் கோவிலுக்கு சென்றதே அதிகம்.

திருமணமாகி அந்தியூர்க்கு சென்ற போது, பலரும் சொல்வார்கள் (குருநாத ஸ்வாமி)ஆடிநோம்பியின் சிறப்பை பற்றி. நான் பார்க்காத ஆடிநோம்பி எங்க கருப்பராயனுக்கு முளைப்பாரி போடறதுல இருந்து 18 ம் நாள் சேவல் நேர்ந்து விடறதும், சாமியாடிக்கு கற்பூரம் போடறதும் அன்னதானம் போடறவரைக்கும் பார்த்தவுங்க நாங்க என இல்லாத காலரை இழுத்து விட்டு திருஞ்சேன். ஆறே மாதத்தில் அந்த ஆடி நோம்பியும் வந்தது. 

அந்தியூருக்கு பக்கத்தில் புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.பிரசித்தி பெற்ற இந்த கோயில்ல திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.  வனக் கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கி மகந்தேர் /மகமேரு  எனும் தேர் இழுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில், அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பர்.இப்போதெல்லம் கோவை,திருப்பூர், சேலம் பெங்களூரில் இருந்தெல்லாம் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதம் முதல் செவ்வாய் அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கி, 15 ம் நாள் முதல் பூஜையும், ஆடித் தேரோட்டமும் நடக்கும். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் கால்நடைச் சந்தை நடைபெறும்.

அந்தியூரின் நகர எல்லையில் ஆரம்பித்து புதுப்பாளையம் வரை சுமார் 6 கிமீ அளவிற்கு சாலையின் இரு மறுங்கிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். குண்டூசி முதல் கார், லாரி, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இரும்பு சாமான்கள், கால்நடைக்களுக்கு தேவையான பொருட்களும் என நிரம்பியிருக்கும்.

 திருவிழாவில் முக்கிய சிறப்பு என்பது இங்கு நடக்கும் குதிரை சந்தை தான் மிகப்பிரபலம். பல்வேறு அரசர்களும் இந்த குதிரை சந்தையில் வாங்கியதாக கூறப்படுவதும் உண்டு. திப்பு சுல்தான் தன் படைகளுக்கு தேவையான குதிரைகளும் போர் சாமான் களும் வாங்கியதாகவும் ஒரு தகவல் உண்டு.

விதவிதமான குதிரைகளும், வகைவகையான மாடுகளும்,ரகரகமான ஆடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படும். காட்சிப்படுத்த என வெளிநாட்டிலிருந்தும் ஆடு மாடுகள் கொண்டு வரப்படுவதும் உண்டு. பாக்கிஸ்தான் குட்டை ரக ஆடுகள் போன்று.காலில் சலக்கை கட்டிக்கொண்டு நடனம் ஆடும் குதிரையும், பந்தயத்திற்கு தயார்படுத்திய குதிரைகளும்  இதில் மிக சிறப்பு வாய்ந்தது.

ஆடி நோம்பி என்றாலே அது "தூரி நோம்பி" தான். கிட்டதட்ட  ஏக்கர் கணக்கில் விளையாட்டு தூரிகள் அமைக்கப்பட்டிருக்கும். ராட்டினம் தூரி, யானை தூரி, பைக் தூரி,கப்பல் தூரி, கப் & சாஸர் தூரி, ப்ரேக் டான்ஸ் தூரி பற்பல தூரி ஆட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒருவித உணர்வை கொடுப்பவையாக இருக்கும்.

எனக்கு மிக பிடித்தது கப்பல் தூரி. கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட  தூரியில் குறுக்கு வரிசையாக அமர்வதற்கு ஏற்றவாறு இருக்கைகள் பலைகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் கப்பலின் முனை பகுதி போல் உள்ள இடத்தில் உட்கார்ந்தால் தான் அதிக விறுவிறுப்பும் உற்சாகம் கலந்ததாகவும் இருக்கும். வைரமுத்துவின் பாடல் வரிகளில் வருவது போல் " வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருளுதடி" என்பதாக இருக்கும். அத்தனைக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றி இருந்தாலும் பயங்கலந்த உற்சாகம் கரைபுரண்டோடிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு தூரியும் ஆடும் போதும்.

மரணக்கிணறு என்று ஒரு காட்சி நடக்கும் அதில் இருசக்கரவாகனத்தில் ஒருவர்  வட்ட வடிவ பாதையில் தனது வாகனத்தை இயக்கிக் கொண்டிருப்பார். எதிர் திசையில் ஒருவர் நான்கு சக்கர வாகனத்தை இயக்குவார். பார்ப்பதற்க்கே மிகுந்த திகுலூட்டுவதாய் இருக்கும். உயிரை பணயம் வைத்து சாகஸம் புரிவது அவர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு எனும் போது கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ளும்.

பகல் நேரத்தில் சாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு உணவும் முடித்துவிட்டு தூரிகடைகளுக்கு சென்றால் விடியவிடிய ஆடித்தீர்ப்போம். அந்த நேரத்தில் தான் வெளியூர்காரர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் அதுவே இரவா?? பகலா எனத் தெரியாது ஜன சந்தடியில் சிக்கித்தான் வர இயலும். நடந்து நடந்து கால்கள் ஓய்ந்தாலும் குதூகலம் கரைபுரண்டோடும் மனம் மட்டும் ஓயாது. இரவு உணவு முடித்திருந்தாலும் ஆடி களைத்து பசிக்கத்துவங்கும் வயிற்றுக்கு கரும்பு ஜூஸ், சோளகருது, அல்வா, பஞ்சுமிட்டாய், மாங்கா, கொய்யா அன்னாசி,தர்பூசிணி என வகை வகையா உள்ளே தள்ளிக்கொண்டே தூரி ஆடிவிட்டு வருவோம்.
அந்த நாட்களில் மட்டும் " ஹைஜீன்" யை கொஞ்சம் மறந்திருப்போம் ;) 

பலநாள் திட்டமிட்டு செல்லும் தீம்பார்க்குகளை காட்டிலும், வருடம் முழுவதும் காத்திருந்து வரவேற்கும் ஆடி நோம்பி எல்லா சந்தோஷத்தையும் பெருக்கும் ஆடிபெருக்காய் அமையும்.

வருடம்  முழுவதும் திறந்திருக்கும் தீம் பார்க்குகள் தரவியலா குதூகலத்தையும்,உற்சாகத்தையும் வருடத்திருக்கு ஒரு முறை வரும் ஊர் நோம்பி தந்துவிட்டு செல்கிறது என்பதுவே மறுக்க முடியாத உண்மை.