முன் எப்பொழுதுமில்லா நிசப்தம்
அதிகாரம் இல்லை,பணிவுடனே
அனைத்தும் நடக்கின்றன.
திமிராய்,ஆக்ரோஷமாய்
கூச்சலிட்ட அனைவரும்
இன்று அமைதியாய்
தலை கவிழ்த்தபடி..
என்றைக்குமில்லா மரியாதை
விதவிதமான
மலர் மாலைகளுடன்,
உற்றார்,உறவினர்களை
உபசரிக்கும் பணியாள் கூட
ஒரு பொருட்டேனும்
என்னை மதிக்கவில்லை,
அறையின் குளிர்நிலை தாங்காது
அலறும் என் குரல்
எவர் செவிகளுக்கும் எட்டவில்லை
உச்சத்தில் வரும் கோபத்தை
கட்டுப்படுத்துகையில் உணர்ந்தேன்
நடுவீட்டில் கிடத்தப்பட்ட
உணர்வுகளற்ற சவமாய்
நான்..!
No comments:
Post a Comment