Monday, April 6, 2020

அப்பாவிற்கு ஓர் கடிதம்...


அன்புள்ள அப்பா,

நலமோடு இருப்பீர் என நம்புகிறேன். நலமோடும் உங்கள் நினைவோடும் வாழும் மகளின் முதல் கடிதம். இது வரை உங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய சூழல் வராதவாறு உங்க அருகிலேயே, அரவனைப்பிலேயே வளர்த்து விட்டீர்கள். முதன் கடிதம் என்பதால், எதை சொல்வது எதை விடுப்பது என்பதில் தான் எத்தனை தடுமாற்றம். உங்களிடம் பேசுவதற்கு எந்த தடுமாற்றமும் வந்ததில்லை இது வரை ஆனால் ஏதோ ஒரு குற்ற உணர்வில் சிக்கித் தவிக்கிறேன் உங்களிடம் எதுவும் மறைத்ததில்லை. உடனுக்குடனே பேசி தீர்த்த விஷயங்கள் தான் எத்தனையெத்தனை. இப்போது உங்கள் அருகாமையை இழந்த பின்னரே தெரிகிறது, எவ்வளவு அனுக்கமாய் ஆதரவாய் இருந்தீர்கள் என்பதை. அந்த காலனுக்கு தான் அப்படி என்ன அவசரம் இருந்திருக்கக்கூடும். திசை அறியாத காட்டில்  கை உதறி , தனிமையில் என்னை விட்டு சென்று விட்டீர்கள்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் பெரும் துயரங்களையும் எளிதில் கடக்க சொல்லிக்கொடுத்திருந்தீர்கள். எதை கண்டும் அச்சம் கொள்ளாமல் துணிவுடன் எதிர் கொள்ள பழக்கப்படுத்தியிருந்தீர்கள். ஆண் பெண் பேதமற்று பழகவும்,  வாழவும் கற்று கொடுத்தீர்கள். " கொடிது கொடிது இளமையில் வறுமை" எனும் கூற்றை உடைத்து மகிழ்வோடு வாழ்வை அதன் போக்கில் ரசித்து ஏற்க கற்றுக்கொடுத்தீர்கள். இப்போதெல்லாம் எதையும் இழந்தாக வருத்தப்படுவதேயில்லை உங்களை தவிர... ஏனோ மனம் உடைகிறது ப்பா.. நீங்கள் இல்லாத இந்த நாட்கள் அவ்வளவு இயல்பாய் இல்லை..

இப்போதெல்லாம் உங்களை மிகவும் இழந்ததாக வருத்தப்படுகிறான் மகன்(விஷால்) இன்னும் கொஞ்சம் காலமாவது உடனிருந்திருக்கலாம்.. உங்களைப்போல அறிவுரையோ தன்மையாய் எடுத்து சொல்ல நண்பனைப்போல யார் இனி எனக்கு கிடைக்கபோகிறார்கள் என சில நேரம் வேதனையோடு பகிர்ந்து கொள்கிறான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவா புரிந்து கொண்டுள்ளான் புகைப்பதினால் ஏற்படும் ஆபத்து பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நன்றாகவே அறிந்துகொண்டுள்ளான்.புகை பழக்கத்தினால் உடலில் சேர்ந்த நிகோடினின் அதி தீவிர தாக்குதல் குறித்து அச்சம் கொண்டுள்ளான். நானற்ற, உங்க இறுதி நாட்களை  உங்கள் அருகிலிருந்து உங்கள் துயர்களை கண்ணுற்றவன். அதனை என்னிடம் பகிரும் போதெல்லாம் அவனிடம் ஏற்படும் பதைபதைப்பும், எந்நேரமும் விழுந்து விடத்தயாராய் காத்திருக்கும் கண்ணீரில் காண்கிறேன் நீங்கள் அவனுக்கு சொல்லிக்கொடுத்த உறுதி மனப்பான்மையை.

 எந்த விதத்திலும் ஈடுசெய்ய இயலாத இழப்பை எனக்கு நீங்கள் அளித்திருப்பதை கண்ட, அவனுக்கு கொஞ்சம் கோபம் உங்கள் மீது இருக்கிறது. அதனை நான் சோர்வுறும் தருணங்களிலெல்லாம், உடன் ஆறுதலாய் இருந்து அணைத்து செல்கிறான் தந்தையுமானவனாய். என் மன அழுத்தங்களுக்கு , புரிதல் எனும் மருந்திடுகிறான் உங்களை போலவே.

இந்த கடிதம் எழுதிகொண்டிருக்கும் நேரம் அவன் பத்தாவது பொது தேர்வை, நீங்க அவனுக்கு பரிசளிக்க வைத்திருந்த பேனாவால் எழுதி கொண்டிருக்கிறான். அதனை உங்கள் கைகளால் கொடுத்து ஆசிர்வதிக்கவாவது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.

உங்களின் இறுதி நாட்களில், என்னை உடன் இருக்க அனுமதிக்காதது எதுவாக இருந்திருக்கும். மிகுந்த அன்போடு இருப்பவரை மரணம் தள்ளி வைத்துவிடும் என பெரியோர் சொல்வதெல்லாம் உண்மைதானோ??  அன்பென்ற சொல் அறியாது அன்போடிருந்திருக்கிறோம் அப்படிதானே அப்பா. தவறுகள் செய்த போதும் கைநீட்டி அடித்ததில்லை என்னை மட்டும் என்றில்லை அண்ணன்களையும் தானே. நிகழும் அணைத்திற்கும் நியாயம் எடுத்துரைத்து, தவறுகளை எங்களையே உணரச்செய்தது உங்க வழிகாட்டுதல். பதின் பருவ தடுமாற்றங்களை எல்லாம் கடந்து வர, கை பிடித்து இழுத்து வராமல் சரியான பாதை எதுவென எடுத்துரைத்து, முடிவுகளை நாங்கள் எடுக்க அனுமதித்தீர்கள். என் மகனுக்கும் அவ்வாறே நானும் இருக்கிறேன் . சிறந்த என் முதல் தோழனாய் நீங்கள் இருந்தீர்கள். அப்பாவை இழந்ததை காட்டிலும் என்னின் சிறந்த தோழனை இழந்து நான் தவிப்பதே அதிகம்.மரணம் யாவர்க்கும் சமம் தான், அது நம்மை அணுகாத வரை தானே.
எல்லோரிடமும் நட்பை பேனும் உங்களுக்கு நிச்சயம் அங்கும் நண்பர் கூட்டம் கிடைத்திருக்கும் அல்லவா, இழந்து தவித்த உங்கள் அம்மாவின் அருகாமையை பெற்றுருப்பீர்கள் தானே. அடிக்கடி உங்கள் நினைவுகளில் இருந்து எடுத்து சொல்லி மகிழும் பாட்டியின் கைப்பக்குவத்தில் இப்போதெல்லாம் உணவு கிடைக்கின்றதா ?? எப்போதாவது எங்களை இழந்தது குறித்த எண்ணங்கள் வருகிறதா அப்பா ?? உங்களின் எண்ணப்படியும் ஆசையின்படியும் என்னையும் அண்ணன் களையும் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் பார்த்துவிட்ட திருப்தியில் இருந்தீர்கள் என்பதை உங்களின் இறுதி நாட்களில் உணர்ந்து கொண்டேன்.

குழம்பும் தருணங்களில் எல்லாம் உங்கள் முகம் தான் கண் முன் தோன்றுகிறது. சோர்ந்து துவளும் என் முகத்தையோ,அயர்ச்சி மிகுந்த என் குரலையோ கேட்ட மாத்திரத்திலேயே காரணத்தை யோசிக்கத் துவங்கிவிடும் உங்கள் மனம். தீர்வை நான் யோசிக்கும் முன்னமே வழிமுறையையும் வழிகாட்டலுமாய் என் கரம் பற்றி வெதுவெதுபாய் பகிர்ந்து கொள்வீர்கள். இது வரையில் எந்த ஒரு துயரும் ஆட்கொண்டதில்லை நீங்கள் என் அருகிலிருந்ததாலேயே,அதை பற்றி நானும் எண்ணியதில்லை.தீர்க்கமான நம்பிக்கையாய் உடன் இருந்தீர்கள்.

 இப்போதெல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு வெறுமை வந்து அப்பிக்கொள்கிறது. அண்ணன்களோ குழந்தைகளோ  இருப்பினும் யாருமற்ற வெற்றிடமாய் தான் தோன்றுகிறது. வாசல் வந்து வரவேற்கும் அந்த குரலை தேடித் தேடி களைத்து போகிறது மனம். சமீப நாட்களில் அம்மாவும்,அண்ணன் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், இப்போது நான் நம் வீட்டின் இரும்பு கதவை திறக்கும் வேளையில் ஒரு வெள்ளை பூணை ஒன்று "மிய்ய்யாவ்" என்று குரல் எழுப்புகிறது அது ஏதோ மனதிற்கு ஆசுவாசமளிக்கிறது ப்பா இப்போதெல்லாம்.

எதற்காகவும் கலங்கியதாக உங்களை நான் பார்த்ததேயில்லை. அது போலவே தான் எங்களையும் வளர்த்தீர்கள்.நீங்கள் விரும்பி எதுவும் கேட்டதில்லை இதுவரை. உங்களுக்கென்று எதன் மீதாவது ஆசை இருந்ததாக கூட எங்களுக்கு நினைவில் இல்லை பாழாய் போன அந்த சிக்ரெட் தவிர்த்து. புகைபிடிப்பதை  மன அழுத்தத்தை வெளியேற்றத்தான் என்பதை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உணர்ந்து கொண்டேன். அத்தனை அழுத்தங்களும் கசடாய் உங்க இருதயத்திலே தங்கி இருந்திருந்திருகிறதே. கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நீங்கள் அறிந்திருந்தீர்களா?? சிறு குழந்தையை போல நீங்கள் கேட்ட அனைத்தயும் நிறைவேற்றாமல் ஏன் நான் மறுத்து ஒதுக்கினேன். "வேள்பாரி"  புத்தகம் தான் நீங்க கேட்டு நான் கடைசியா வாங்கி கொடுத்தது. அதில் தான் உங்களுக்க்உ எவ்வளவு மகிழ்வு. வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் ,அதை கூறி எவ்வளவு மகிழ்ந்தீர்கள்.

வாழ்க்கையில் எதுவும் முக்கியமில்லாது பணத்தை நோக்கி ஓட வைக்காமல். பணத்தின் மதிப்பை உணர்ந்திருந்தோம். எதுவும் எளிதில் சம்பாதித்து விடலாம், உறவையும் நட்பையும் தவிர என உறவின் உன்னதத்தையும், நட்பையும் மதிக்கக் வாழ்ந்து கற்று கொடுத்தீர்கள். எதற்காகவும் தைரியம் இழக்காமல் வாழ்க்கையை வென்று காட்டியவர் தானே ப்பா நீங்க எல்லோருக்குமான தைரியமாய் இருந்தவர் அல்லவா, எந்த கட்டத்திலும் சவால்களை எதிர்த்து துணிவோடு எதிர் கொண்டு தானே பழக்கம். 

இறுதி நாட்களில், உங்களுது தைரியமற்ற வார்த்தைகளை  நம்ப மறுத்து ஏன் உங்களை விட்டு சென்றேன். நீங்க் அளித்த  அந்த தைரியத்தை,  உங்களுக்கு திருப்பி அளிக்க ஏன் மறுத்து சென்றேன். மருத்துவமனையின் அந்த படுக்கையில், மூச்சிற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த போதும் என்னை பார்த்ததும் ஆசுவாசமான உங்கள் சுவாசிப்பை சீராக்கியது எதுவென உணர்ந்த பின்னே புரிந்தது நீங்க சொல்லியதின் வலி " நீ கூட இருந்தா தைரியமா இருப்பேன் மா "  என்று.

என் முழு வாழ்விற்குமான பிழையை, உங்களோட அந்த கடைசி வார்த்தையிலிருந்து மீள முடியாமல் அந்த  குற்ற உணர்விலேயே இன்னமும் உழலச் செய்கிறது. மன்னிக்க இயலாத பிழை தான். இனி யாரிடம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாதெனும் மிகப் பெரிய பாடத்தை தண்டனையாய் கொடுத்துருங்கீங்கப்பா. மீளும் வழி அறியாமல் குற்ற உணர்விலேயே சுழல்கிறது மனம்.  ஆனாலும் மீண்டு வருவேன் ப்பா உங்கள் கனவுகளையும்  ஆசைகளையும் நிறைவேற்றி.

இப்படிக்கு
உங்க அன்பு மகள்...


2 comments:

  1. உண்மையான வார்த்தைகள். தேவதைப்போன்ற இளவரசிகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மனக்கஷ்டத்திற்கு அவர்களின் அருகாமை மட்டுமே தைரியமான மருந்தாகக்கிடைக்கும் என்பது அதேபோல இளவரசிகளுக்கும் தெரியும் தந்தையின் இழப்பு ஒரு சாம்ராஜ்யத்தை இழந்ததுபோல இருக்குமென்பது.இதை மனதால் உணர்ந்வர்களுக்கு மட்டுமே உணரமுடியும்.சிலசமயம் இழப்பை உணர்ந்த தனயன்களுக்கும் தெரியும்.

    ReplyDelete