Sunday, April 26, 2020

எவர் பொருட்டும்...

எல்லோருக்குமான ஆசை என்பது, அவரவர் நிலையிலிருந்து மாறி நான் அப்படியாக இருந்திருக்கலாம்/ இவ்வாறு இருந்திருந்தா என ஒரு மாறுபட்ட எண்ணங்கள் மனதினுள் ஓடாமல் இருந்திருக்க முடியாது. அப்படியான எண்ணங்களையும் ஆசைகளையும் முற்றிலும் நிராகரிக்காமல் சிறிதளவேனும் தம் ஆசையை/ விருப்பத்தை  தனக்கு சாதகமான சூழலில் நிறைவேற்றிக் கொள்வோரும் உண்டு. நிஜத்தில் பார்க்கின்ற மனிதர்களுக்கு கொஞ்சமும் பொருந்திப் போகாத ஒரு புனைவு ஒன்றையே கதாபாத்திரங்களாக வடிக்கத் துடிகின்றனர் எழுத்தாளர்கள் எனலாம். ஆனால் "வண்ணதாசன்" அவர்களின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எப்படி எப்போதும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே படைக்கப்படுகினறனர் எனும் எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர் சந்திக்கும் மனிதர்கள் அப்படியானவர்களா அல்லது அப்படிப்பட்ட நேர்மறை மனிதர்களை மட்டுமே அவர் சந்திக்கின்றாரா எனும் கேள்வியோடு அவர் எழுத்துகளை வாசிக்கத் துவங்குகையில்,  " தவிப்பிற்கும், விருப்பத்திற்கும் இடையில் தான் உறவும் வாழ்வும் கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்த சிறுகதைகள்" என தன் தரப்பு நியாயங்கள் முன் வைத்து எழுதியிருக்கிறார் நூல் குறித்த முன்னுரையில்.

வாசிப்பதற்கு ஏதுவான மொழிநடையில், அருகிலமர்ந்து சிநேகமாய் புன்னகைது வாஞ்சையோடு பகிர்வது போல இருக்கும் ஒவ்வொரு கதையும். கதையின் ஓட்டத்தில் நம் மனது சற்றே அசைத்துப் பார்க்கத் தூண்டும் எதிர்மறை கருத்துகளாலும்/ எண்ணங்களாலும்  சூழப்பட்ட நமக்கு இதில் திருப்பமாக யாரேனும் வரக்கூடும் என எண்ணும் நம் மன ஓட்டத்திற்கு, காலமும் சூழலுமன்றி மனிதர்கள் ஒருபோதும்  எதிர்மறையானவர் அல்ல என்பதை தம் எழுத்தில் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

ஊரில்  ஒரு வீட்டின் முன் இருக்கும் ஒரு சிலையினை வைத்து ஒரு கதை புனைய யாருக்கு தோன்றியிருக்கும், சிலையாகி போன நினைவுகளுக்கு, கொஞ்சம் ஞாபக வர்ணம் பூசி நினைவுகளில் மீட்டி விடத்தான் எவ்வளவு பேராவல் புகுகின்றன ஒவ்வொருவருக்கும். இக்கதையை வாசித்து கொண்டிருக்கையில் பால்யத்தில் கண்ட ஒவ்வொரு வீட்டின் முகப்போடும்  பொறுத்திப் பார்த்து நம் ஞாபகங்களை மீட்டெடுத்திருப்போம் . சிதிலமடைந்து, பொலிவின்றி இப்போதைய நிலையில் இருக்கும் எதுவும், நினைவில் அப்படியே தான் இருக்கின்றன எத்தனை ஆண்டுகளானாலும். அதன் வர்ணங்களோ, பூச்சுகளோ உதிர்வதேயில்லை.

பறிக்கும் பூக்களை காட்டிலும் உதிர்கின்ற பூக்களுக்கு எவ்வளவு மணம் நிறைந்திருக்கும் என்பதையும், கட்டாயப்படுத்துதலுக்கும்,  தன்முனைப்பிற்கும் இடையேயான சக்தி அது தான் என உணரமுடியும். ஒரு விஷயத்தை எதன் நோக்கில் யாரிடம் எப்படி கையாள்வது என யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு நொடியைக் கூட தன்னியல்பில் வரும்  சொற்களை ஆற்றில் உருண்டோடிவரும்  கூழாங்களாய் உருவகப்படுத்த அவரால் முடிகிறது. "சொல்லை இடைவெளியும், இடைவெளியைச் சொல்லும் கூழாங்கல்லாய் உருட்டி ஈரமணலில் ஒதுக்கும் ஆறும் அழகு. கரையும் அழகு" என முடித்திருப்பார்.

பூக்களின் நறுமணத்தைப் போல சொற்களின் வாசனையையும்  உணர முடியும். காணத் தவறிய மலர்களின் வாசனையை தேர்ந்து நுகர முடியும். குறிப்பிட்ட வீதியில், ஒரு வீட்டின் அடையாளமாய் மருதாணி செடி பூத்திருக்கும் வாசனையை சொல்லியிருப்பார் யாரும் தன் நினைவுகளில் கொண்டு வர இயலாததொரு மணமாய் அது நம்மை சுற்றி ஆக்கிரமிக்கத் தொடங்கும். அந்நேரத்தில் தாமரைப்பூவின் மனம் பற்றி விவரிக்கத் தொடங்கியிருப்பார் யாராலும் சொல்ல முடியாததொரு வாசனை அந்த தாமரைக்கும்.

வேப்பம்பூ பூத்து உதிர்ந்திருக்கும் சாலையில் காலை நடை என்பது மெல்ல சாகக்கொடுத்தலுக்கு சமமாய் இருக்கும் என்றிப்பார். அத்தனை பூக்களையும் வாழ்க்கையில் ஒரு நொடியேனும் கையிலேந்தி வருடி முத்தமிட்டு அதன் வாசனையை நுகர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

ஒரு சிறுகதையில், மலர்களின் மணத்தையும், மனிதர்களின் மனதையும் ஒன்றாய் நுகர கொடுக்கும் பாங்கு அழகியலின் ருசி எனலாம். தானாய் உதிர்கின்ற மலர்களைப்போல, மனித மனம் உதிர்க்கும் சொற்களின் மணத்திற்கு எத்தனை விதமான  நறுமணம். அத்தணையிலும் அதீத வீரியம் மிகுந்து காணப்படுகிறது. அப்படிப்பட்டது தான் செல்லையாவின் மனமும் அத்தனை வாசனை மிகுந்தது என சொல்கிறார். அங்கு அதில் நேர்மையின், நம்பிக்கையின் பொறுப்பின் நறுமணத்தை வாசிக்கையில் நுகர முடியும்.

மனித மணம் கண்ணாடியை விட நுட்பமாய் கையாள பட வேண்டுமென்பதை சூசகமாய் விவரிப்பது எவ்வளவு நாசூக்கானது. அதிலும் பதின் வயது பிள்ளையின் மனதை கைகொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே. அறிவுரைகளை வெறுக்கும் மனம் அவர்களது, அறிவுரையென எண்ணாத அளவிற்கு நமது பேச்சும், செயல்களும் சில நேரங்களில் புரிதல்களும் அவர்களை நோக்கி இருக்கவேண்டும். செல்லையாவின் தந்தையின் பொருட்டு அவனிடம் பேசி கொண்டிருக்கையில் தேர்வில்  தன் மகன் தோல்வியுற்றதை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக நினைக்கும் தந்தைக்கு, எல்லா தண்டனையும் ஒரு இடத்துல முடிஞ்சு போகுமில்லையா ?? எனும் மகனின் பதிலில்  அத்தனைக்கும் தீர்வாய் விடையளித்திருப்பார். இரு மனங்கள் மோதிக்கொள்ளும் போது உடைந்து போக வேண்டியதில்லை என்பதை,கண்ணாடி என்றால் எளிதில் உடைந்து போக வேண்டும்  என்று கட்டாயமா என்ன?? என முடித்திருப்பதில் மனதை கண்ணாடியோடு ஒப்பிட்டு இருப்பார்.

பெரும்பாலும் இவரது கதைகள் மனித மனங்களை பற்றி பேசக்கூடியவைகளாகவே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கத் தவறியவைகளாகவே இருப்பது தான் வியப்பு. கால சுழற்சியில் வாழ்கையின் பெரும் பரபரப்பு மிக்க ஓட்டத்தில், சிதறிவிழும் சாமான்ய மக்கள் இவர்கள். தன் இயல்பை தொலைக்காத ஒரு அச்சில் வார்க்கப்பட்டவர்கள். மிக எளிய மனிதர்கள். இந்த யுகத்தின் வேகத்திற்கு, அழுத்தத்திற்கு ஒப்பு கொடுக்காதவர்கள். மனிதர்களாகவே வாழ படைக்கப்பட்டவர்கள்.

மனங்களின் இடவல மாற்றங்களுக்கு மனிதர்கள் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் இயல்பு என்பதை இருவேறு வகைகளாக மாறக்கூடியது அல்லது மாற்றக்கூடியது. திருமணத்திற்கு முன் பின் என மாறுபடும். நிலைக்கண்ணாடியில் தோன்றும் முகம் தனதானதா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவளுள் மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

மீனா, தஞ்சைக்கு தனது தோழியும்  சகோதரியுமானவளின் வீட்டிற்கு திருமணத்திற்கு பின்பும் தான் மட்டும் தனித்து வருகிறாள். கொஞ்சமும் தன்னியல்பை தொலைக்காதவளாய் இருப்பது தோழிக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. முகம் முழுக்க பவுடர் போடுவதும், கண்ணுக்கு மைத்தீட்டி கொள்வதும், மல்லிகையோடு கனகாம்பரமும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென கேட்பதுவும்  சத்தம்போட்டு சிரிப்பதுவும்.,பெரிய கோவில் வளாகத்தில் மெய் மறந்து வேடிக்கை பார்ப்பது என துளியும் அவள் மாறவில்லை என்று தோழியின் கண்ணோட்டத்தில் கதை நகர்வதாக  இருக்கும். ஒரு பெண்ணின் மனப்பாங்கில் ஆண் (எழுத்தாளர்) சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களும் பெண் மனதிற்கு ஏற்புடையதாகவே இருக்கும்.இப்படியாக மீனாவுடனும், செல்லையாவுடனும் சில காலம் அவரின் சிறுகதையில்          வாழ்ந்துவிட்டு வரலாம் 

வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர், பணி நிமித்தம் காரணமாக மாற்றலாகி போகும் இடங்களில் காணும் மனிதர்களின் வாழ்வும். அவர்களின் தேடலுமே இவருக்கான கருத்தும் தேர்வுமாகவும் சில நேரங்களில் பாடமாகவும் போதனையாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தான் பயணித்த தூரம் குறைவு, சந்தித்த இடங்களும் மனிதர்களும் குறைவு என அவர் கூறிக்கொண்டாலும், எதிர்படும் மனித முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகை காட்டிச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு உலகின் மூச்சும் பெரும் வியப்பும் அவருக்கு அலாதியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன. மனிதர்களின் மிக நுண்ணிய உணர்வுகளையும் கண்டு பதிவு செய்யும் அவரது மொழி பிசிறற்றது. வாழ்க்கைக்கென்ன அதுபாட்டுக்கு  என்னென்னவோ சொல்லித்தான் செல்கிறது. வாழ்கை ஒரு அற்புதமான கதை சொல்லி, அதை ஏற்பதும் விடுப்பதும் அவரவர் விருப்பம். அவரின் சிறுகதை ஒவ்வொன்றும் தான் கண்ட மனித முகங்களின் மீதான வரிகளை எவ்வாறெல்லாம் வாசிக்கத் துவங்கலாம் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கும். அதனடிப்படையில்  அணுகத்துவங்கினாலே போதுமானது.

அன்றாட தேவைக்கு மேல் அல்லாமல் சம்பாதிக்கும் சாமான்யனின் வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சி என்பது கோடி கோடியாய் பொருளீட்டிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை.  அந்த சாமான்யன் எதிர் கொள்ளும் ஒர் நாள் என்பது சவால்களும் சங்கடங்களும் நிறைந்து இருப்பினும் அந்த மனித முகத்தில் தெரியும் நிம்மதி வரிகளை வாசித்திட முனைபவர்களாலேயே வாழ்வை அதன் போக்கில் ஏற்று நடந்திட முடியும் என்பதை வண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு சிறுகதையும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

வாசிப்பின் மீது அவ்வளவு நாட்டம் இல்லையெனினும், வாசிக்கும் புத்தகம் நம்மில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புபவள் நான். குறைந்த அளவில் தான் வாசித்திருக்கிறேன். ஏனோ எனக்கு ஒருவரை மட்டுமே மிகப்பிடித்த எழுத்தாளர் என்றோ, பிடித்த புத்தகம் இது ஒன்று தான் எனவோ எதையும் குறிப்பிட்டு கூறிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு புத்தகம் ஏதோவொன்று உணர்த்துகிறது. நம் பார்வை கோணத்தை மாற்றுகிறது. நம் இயல்பை மாற்ற சரி செய்ய முனைகிறது. அவ்வகையில் என்னுள் சில மாற்றங்களையும், பார்வை கோணங்களையும் சரி செய்ய வண்ணதாசன் அவர்களின் எழுத்து துணை நிற்கிறது என்றால் மிகையாகாது.






1 comment:

  1. வண்ணங்களில் இன்னும் கொஞ்சம் அழகு குழைக்கப்பட்டு இருக்கலாம்

    ReplyDelete